திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)




திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

    பொருள் அடக்கம்

    1 சிவபுராணம் (1)
    2. கீர்த்தித் திரு அகவல் (2)
    3. திருவண்டப் பகுதி (3)
    4. போற்றித் திருஅகவல் (4)
    5. திருச்சதகம் (5 - 104)
    6. நீத்தல் விண்ணப்பம் (105 - 154)
    7. திருவெம்பாவை (155 - 174)
    8. திரு அம்மானை (175 - 194)
    9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் (195 - 214)  
    10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் (215 - 234) 

1. சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது
தற்சிறப்புப் பாயிரம்)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

2. கீர்த்தித் திரு அகவல் 


(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5

என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10

கல்லா டத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15

விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20

நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30

தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறா அது
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45

ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50

தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக்
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55

பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்து இனிது அருளி
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத் 95

தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105

ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதலன் ஆகிக் கழுநீர் மாலை
ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115

பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாராவழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120

ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்
இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை யாகவும்
எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125

அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம்மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130

ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135

நாத நாத என்று அழுது அரற்றி
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே

திருச்சிற்றம்பலம்

3. திருவண்டப் பகுதி 

( தில்லையில் அருளயது - இணைக் குறள் ஆசிரியப்பா)

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10

எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள், காப்பவை
காப்போன், கரப்பவை கருதாக் 15

கருத்துடைக் கடவுள், திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும்
அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20

மதியில் தண்மை வைத் தோன், திண்திறல்
தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25

மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று
எனைப் பல கோடி எனைப் பல பிறவும்
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
முன்னோன் காண்க, முழுதோன் காண்க
தன்நேர் இல்லோன் தானே காண்க 30

ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க
கானம் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35

அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க, பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க, அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்றும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரிய அதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55

தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60

புவனியல் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க 65

பரமா னந்தம் பழம் கட லதுவே
கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70

வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டம் கையற வோங்கி
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100

எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர்அமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் 110

சொல்பதம் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120

ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130

இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135

ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140

ஒளிfக்கும் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின்
தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145

தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150

அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின்
அடியோம் அடிக்குடில் 160

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165

அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதம் ஆன அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175

உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே

திருச்சிற்றம்பலம்

4. போற்றித் திருஅகவல் 

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10

யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் 50

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் தங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகு அது போலத் 60

தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
கசிவது பெருகிக் கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70

சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100

இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170

களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தேளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200

தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210

படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220

புரம்பல் எரித்த புராண போற்றி
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சய சய போற்றி 225

திருச்சிற்றம்பலம்

5. திருச்சதகம் 

(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) 

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7

சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10

முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11

உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும்
இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக்
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12

பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்
அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே
புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 13

புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே
தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே
நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14

2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) 
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்
வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்
இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17

ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21

அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22

வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்) 
வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக் கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26

ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே
எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. 27

பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்று என்றே பேசிப் பேசிப்
பூசின்தான் திருமேனி நிறைப் பூசி
போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை
மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28

வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன்
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி
மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத்
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி
அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்
கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே
நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்
கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மலர் புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33

தேவர்க்கோ அறியாத தேவ தேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியரோடும்
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34

4. ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) 
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35

அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப்
பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36

மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்
கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37

கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திருப் பாதம்
முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம்
அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. 38

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு
அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்
கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன்
செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை
பரகதி புகுவானே. 39

புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்
குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40

வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத்
திசையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதணாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே. 41

ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனையென் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே. 42

ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43

வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 44

(தொடரும்...)

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு