TAMIL-BRAHMI-எகிப்தில் செங்கடல் துறைமுகத்தில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட ‘பானை உறி’


எகிப்தில் உள்ள குவாசிர் அல் காதீம் என்ற செங்கடல் துறைமுகத்தில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட ‘பானை உறி’ கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சவுத்தர்ம்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தொல்லியல் அகழாய்வு குழு இதனை கண்டறிந்தது. பானையியல் வல்லுநர் டாக்டர் இராபர்ட் டாம்பர் இதனை இந்தியாவை சார்ந்த பானை என கண்டறிந்தார். ஐராவதம் மகாதேவன் அவர்கள், அதனை ஆய்வு செய்து, “பானை ஒறி” என எழுதப்பட்டுள்ள, இந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என தெரிவித்துள்ளார். அவர், பாண்டிசேரி பிரெஞ்சு நிறுவன பேராசிரியர் பு.சுப்பராயலு, பாண்டிசேரி பல்கலைக்கழக முனைவர் கா.ராஜன், தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் ப. செல்வகுமார் ஆகியவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் 30 வருடங்களுக்கு முன் அதே இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த இரு மட்பாண்ட தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. அவற்றில் கணன், சாதன் என எழுதப்பட்டிருந்தது. 1995ல் எகிப்தில் உள்ள பெரனிகே என்ற துறைமுகத்தில், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு மட்பாண்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்தது. ஆக கி.மு முதல் நூற்றாண்டிலேயே தமிழி எழுத்து எகிப்தில் இருந்திருப்பது, அதன் பழமை குறித்த முந்திய தரவுகளை உறுதி செய்கிறது எனலாம். (SOURCE: TAMIL BRAHMI SCRIPT IN EGYPT- THE HINDU, DATED: 21.11.2007) தாய்லாந்தில் பூகவோ தாங் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது. தாய்லாந்து மற்றும் பிரெஞ்சு அகழாய்வு குழு ஒன்று இதனைக் கண்டறிந்தது. ஐராவதம் மகாதேவன் அவர்கள், அதனை ஆய்வு செய்து, ‘துறவன்’ என்று பொருள்படும் சொல்லின் மூன்று எழுத்துக்கள் மட்டுமே அதில் இருப்பதாகவும் அதன் காலம் கி.பி 2ம் நூற்றாண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.( SOURCE: TAMIL BRAHMI INSCRIPTION ON POTTERY FOUND IN THAILAND-THE HINDU, DATED: 16.7.2006) 1992-93ல் நொபுரு கரோசிமா தலைமையில் தாய்லாந்தில் நடைபெற்ற அகழாய்வில், கி.பி 3ம் நூற்றாண்டைச் சார்ந்த “பெரும் பதன் கல்” என தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உரைகல் ஒன்று கிடைத்துள்ளது. இது பெரும் பத்தன் உரைகல் எனத் தெரிகிறது. ஆக தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், கி.பி. 2ம், 3ம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. (ஆதாரம்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-ராஜன், பக்: 104) 2000ஆண்டுகளுக்கு முந்தைய, பண்டைய தமிழி எழுத்துக்கள் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் கிடைப்பது என்பது, தமிழர்களின் உலகளாவிய வாணிபத்தை, அவர்களின் கல்வியறிவை, அவர்களின் தொழில்நுட்ப மேன்மையை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியை, அவர்களின் செல்வ வளத்தைப் பறை சாற்றுகிறது எனலாம்.

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...