சேரசோழபாண்டிய நாடார்கள் கட்டிய கோயில்


சேரசோழபாண்டிய நாடார்கள் கட்டிய குலசேகரன்பட்டினம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் திருக்கோயில் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்கு தெற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் உள்ளது.சங்கத் காலத் துறைமுகமாக திகழ்ந்தது. குலசை என்று அன்புடன் அழைக்கப்படுகிறது. மானவீரவளநாட்டு குலசேகரன்பட்டினம் என்று இக்கோயிலில் காணப்படுகின்ற கல்வெட்டு கூறுகின்றது.கி.பி 17 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் மீது பாடப்பெற்ற அறம் வளர்த்த நாயகி பிள்ளைத்தமிழ் இவ்வூரை வீரவளநாடு, தமிழ்க்குலசை, தமிழ்தென்குலசை என்று போற்றிப்பாடுகிறது குலசையின் வடபுறம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் ஆதவன் திசை நோக்கியவாறு உள்ளார். இவருடன் உலக அறங்களை நெறிப்படுத்த அன்னை அருள்மிகு அறம்வளர்த்தநாயகி அருள் வழங்கிக்கொண்டு இருக்கிறார். கி.பி 13 இல் சோழரிடம் இழந்து போன பாண்டிய நாட்டரசை மீட்டெடுத்த பாண்டியன் [முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்] கி.பி.1216-1244 இல் அவரது வெற்றியின் நினைவுச் சின்னமாக இத்திருக்கோயிலின் திருப்பணிகளைச் செய்துள்ளார். இப்பாண்டியனின் போர்க்களக் காட்சிகள் புடைச்சிற்பமாக சுவாமியின் சன்னிதி முன்பாக மகாமண்டபத்தின் விதானப்பகுதியில் காட்சி தருகிறது. கருவறை மூலவரான அருள்மிகு காஞ்சி விஜயகச்சி பாண்டீசுவரருக்கு கீழ்பகுதியில் அடுக்கடுக்காக பன்னிரண்டு சிவலிங்கங்கள் இருப்பது உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டைக் குறிப்பதாக உள்ளது . மூலவருக்கு அருகே குண்டலினிச் சக்தி அம்மன் நிற்கிறார். நீள் சதுரவடிவில் கருவறை. கருவறையைச் சுற்றிலும் அரைத்தூண் அமைப்பும், பாண்டியர்கால வெட்டுப் போதிகையும் உள்ளன .அதிட்டானம், சுவர் பிரஸ்தரம், கீரிவம், சிகரம், ஸ்தூபி அமைப்புகள் உள்ளன. பட்டிகை மற்றும் ஜெகதி பகுதியில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கருவறைக்கு வெளியே அர்த்தமண்டபத்தில் அருள்மிகு விநாயகரும் அருள்மிகு ஆறுமுகப்பெருமானும் அமர்ந்து அருளாட்சி செய்கின்றனர். அடுத்து அருள்மிகு உற்சவமூர்த்திகள் கொலுவீற்றுள்ளனர். அதற்கு அடுத்த சன்னிதியில் அருள்மிகு நடராஜப்பெருமானும் அன்னை சிவகாமியும் மலர்ந்த முகத்தோடு காட்சி தருகின்றனர். முகமண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கி ஒளிவீசும் அருள்மிகு அறம் வளர்த்த அம்மனின் கருவறை உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூவகை அறத்திற்கும் காவலாக ஆணிவேராகத் தாயுள்ளத்துடன் விளங்கும் அன்னை கோடி சூரியனாகக் காட்சி தருகிறாள், வலது கையில் செண்டு இடது கையில் எழிலாகத் தொங்கவிட்டவாறு பூவுலகைக்காத்து வருகிறாள். அம்மனின் சந்நிதிக்கு இடதுபுறம் பள்ளியறை உள்ளது. மூலவரின் சன்னிதிக்கு முன்பாக முகமண்டபத்திலிருந்து கீழே இறங்கினால் முதல் பிரகாரத்தில் அருள்மிகு அதிகார நந்தி பணிவுடன் இருகரம் கூப்பிய நின்ற நிலையில் காணப்படுகிறார். அவருக்கு இடதுபுறம் அருள்மிகு சூரியபகவான் ஒளிவிடுகிறார். நேராக மேற்கே சென்றால் சுவாமியின் கருவறையின் தெற்குப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் உலகாளும் ஈசனைக்கும்பிட்ட நிலையில் உள்ளனர். 63 நாயன்மார்கள் மண்டபத் தூண்களுள் மூன்றில் அரசகுலத்தோற்றம் கொண்ட மூவர் கருவறையை நோக்கி கும்பிட்டவாறு உள்ளனர். மூவரில் உயமானவர் பாண்டிய மன்னன் ஆவார். இக்கோயிலுக்குத் திருப்பணி செய்து காஞ்சி விஜயகச்சி கச்சிகொண்ட பாண்டீசுவரர் என்று பெயருமிட்டவர்.இவருக்கு முன்புறம் கருவறையின் தேவகோட்டத்தில் ஐந்து அடி உயரமுள்ள அருள்மிகு தட்சிணாமூர்த்தி கருணை வடிவாகக் காட்சி தருகிறார்.இவருக்கு வலப்புறம் சுற்றில் பாண்டியன் சிவனை வழிபடுவதாக சிறிய புடைப்புச் சிற்பம் உள்ளது.தென்மேற்கு கன்னி மூலையில் அருள்மிகு கன்னி விநாயகர் மூன்றடி உயரத்தில் எழிலாக அமர்ந்துள்ளார் .இவரது துதிக்கையின் மடிப்புகள் சிற்பியின் சிற்ப நுட்பத்திற்குச் சான்றாகும். இப்பிரகாரத்தில் அருள்மிகு காசிவிசுவநாதர் , அருள்மிகு நாகராஜர், அருள்மிகு வேதபுரீசுவரர், அருள்மிகு உண்ணாமுலை அம்மன் உடனாய அருள்மிகு அண்ணாமலையார் ஆகியோர் அருளீந்து கொண்டிருக்கின்றனர். மேற்கு தேவக்கோட்டத்தில் குழலூதும் அருள்மிகு கண்ணனின் நுட்பமிகு சிற்பம் உள்ளது. இது பிற்காலத்தில் பொருத்தப்பட்டது போல காட்சி தருகிறது. அருள்மிகு சண்டிகேசுவரரை வழிபட்டுச் சென்றால் இவருக்கு வடக்கே தெற்கு நோக்கியவாறு தலவிருட்சமான மாமரமும் அதனடியில் அருள்மிகு மாவடிஅம்மன் பக்தர்களுக்கு அருளீந்து கொண்டிருக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த அம்மனை வழிபட்டு வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் தலவிருட்சமாக இருந்த பெரிய மாமரத்தில் காய்த்த மாங்கனியைப் பறித்து மாவடி அம்மனின் பாதத்தில் படைத்து வழிபட்டு உண்டு வந்தால் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் . தற்போது தலவிருட்சமான மாமரம் இல்லாத காரணத்தால் மாங்கனியை அம்மனுக்கு படைத்துச் செல்கின்றனர். நீண்டகாலமாக திருமணம் நடக்காமல் திருமணத்தடை உள்ளவர்கள் அம்மனை வழிபட்டு அம்மனுக்கு மஞ்சள்நீராட்டி பட்டு வழங்கினாலும் வளையல்களைப் படைத்து வழிபட்டாலும் விரைவில் திருமணம் நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். மாவடி அம்மன் சன்னிதிக்கு அடுத்து அருள்மிகு சனிபகவன் உள்ளார். அவருக்கு இடப்புறம் சூரியனின் அம்சமான அருள்மிகு காலபைரவர் சன்னிதி உள்ளது. ஐந்து அடி உயரத்தில் நின்ற நிலையில் அக்கினி ஜுவாலை வீசும் கோலத்தில் உள்ளார். பில்லி, சூனியம், தீராத வியாதிகள் நீங்குகின்றன. பைரவருக்கு அஷ்டமி நாளில் எண்ணைய்க் காப்பு செய்து, புனுகு, சாத்தி, புத்தாடை அணிவித்து பூமாலைகளால் வழிபட்டாலும், சாம்பார் சாதம் படைத்து வழிபட்டாலும் நல்லதை நடத்தி வைப்பவராக அருள்மிகு காலபைரவர் கருணை உள்ளமிக்கவராக உள்ளார். இவரை வழிபட்டுத் திரும்பினால் அருள்மிகு சந்திரபகவான் ஈசனைக் கும்பிட்டவாறு பணிந்து நிற்கிறார். இந்த மண்டபத்திலிருந்து கீழே இறங்கினால் அருள்மிகு நந்திபகவான், பலி பீடம், நெடிதுயர்ந்த கொடிமரம் மெய்சிலிர்க்க வைக்கும். வலமாகச்சென்றால், இந்த கோயிலில் பாடிப்பாடித் தொண்டாற்றிய ஓதுவாமூர்த்திகளான குமாரசுவாமி, பண்டாரசிவாசுவாமி, சரவணசாமி, சிவசிதம்பரசாமி, ஆகியோரின் ஆறடி உயரச்சிலைகள் சிவனைப் பணிந்தவாறு கரங்களைக் கூப்பியவாறு உள்ளனர். மேற்கே சென்றால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது, மண்டபத்தின் பின்புறம் அருள்மிகு கல்யாண வினாயகர் காட்சி தருகிறார். வடகிழக்கு மூலையில் அருள்மிகு தில்லைநடராஜப்பெருமானின் ஆனந்தத்தாண்டவக் காட்சி எழிலாக அமைந்துள்ளது. அருள்மிகு நடராஜர், அருள்மிகு அம்பிகை, அருள்மிகு பதஞ்சலிமுனிவர், அருள்மிகு வியாக்கிரபாதர், தாளமிடும் நந்தியெம்பெருமான், ஆகியோருடன் ஈசனின் திருநடனத்தை அருள்மிகு காரைக்காலம்மையார் பண்ணிசைப்பதாய் அமர்ந்த நிலையில் உள்ளார். திருநடனம் காணும் இச்சித்திரசபைக்கு எதிரே உலகத்தைக் காக்கும், அண்டத்தைக்காக்கும் நவகிரகநாயகர்கள் உள்ளனர். ஒன்பது கிரகங்களுடன் அருள்மிகு சூரியபகவான் தமது துணவியரான அருள்மிகு சாயதேவி, அருள்மிகு சமிக்ஞா தேவி ஆகியோருடன் அருள் வழங்கியவாறு உள்ளனர். இக்கோயிலுக்கு சிறப்பு வாய்ந்த இரு தீர்த்தக் தெப்பக்குளங்கள் உள்ளன. தலவிருட்சமாக மாமரம் உள்ளது. திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை அகல, செய்வினைக் கோளாறுகள் தீர குலசேகரன்பட்டினம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் திருக்கோயிலுக்கு குடும்பத்துடன் வாருங்கள். இக்கோயில் அருகில்தான் உலகம்முழுவதும் போற்றும் தசரா விழாவிற்கு பெயர் பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலும் உள்ளது. கோயில் நகரமாதலால் ஏராளமான கோயில்களைக் காணலாம்.

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...