கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா
1. விக்கிரம சோழனுலா
| சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக் கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த  | 1 | 
ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன் காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க  | 2 | 
மையறு காட்சி மரீசியு மண்டிலஞ் செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர்  | 3 | 
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத்  | 4 | 
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும் கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய  | 5 | 
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும் போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக்  | 6 | 
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத் தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழிந்  | 7 | 
தோடி மறலி யொளிப்ப முதுமக்கட் சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம்  | 8 | 
தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில் வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்குப்  | 9 | 
பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர் குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக்  | 10 | 
காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்து தூக்குந் துலைபுக்க தூயோனும் - மேக்குயரக்  | 11 | 
கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக் தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச்  | 12 | 
சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதியும் -இன்னருளின்  | 13 | 
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம்  | 14 | 
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட  | 15 | 
கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம் காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப்  | 16 | 
பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவிக்  | 17 | 
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை  | 18 | 
முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி செற்ற தனியாண்மைச் சேவகனும் - பற்றலரை  | 19 | 
வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல  | 20 | 
பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால் ஆடவரப் பாய லமைத்தோனும் - கூடல  | 21 | 
சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின்  | 22 | 
காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள் பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம்  | 23 | 
சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால் சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக்  | 24 | 
கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண் டடல்கொண்ட மாராட் ரானை - உடலை  | 25 | 
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி  | 26 | 
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும் ஆரிற் பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத்  | 27 | 
தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய  | 28 | 
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச் செம்மைத் தனிக்கோ றிசையளப்பத் - தம்மை  | 29 | 
விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக் கடவுட் களிறு கவிப்பச் - சுடர்சேர்  | 30 | 
இணைத்தார் மகுட மிறக்கி யரசர் துணைத்தா ளபிடேகஞ் சூடப் - பணைத்தேறு  | 31 | 
நீராழி யேழு நிலவாழி யேழுந்தன் போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராரும்  | 32 | 
மேய் திகிரி விரிமே கலையல்குற் றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின்  | 33 | 
ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய கோதில் குலமங்கை கொங்கையினும் - போதில்  | 34 | 
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும் உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற்  | 35 | 
றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு தென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர்  | 36 | 
வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண் பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட  | 37 | 
நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல் தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைந்தடங்  | 38 | 
கண்ணு முலையும் பெரிய களியன்னம் எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு  | 39 | 
பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன் எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத  | 40 | 
பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக் கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை  | 41 | 
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப் பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச்  | 42 | 
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த  | 43 | 
அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்  | |
தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையன மானக் கலன்கள் வரவருளித் - தேன்மொய்த்துச்  | 44 | 
சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனே தாழு மகரக் குழைதயங்க - வாழும்  | 45 | 
தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற் சுடர்மணிக் கேயூரஞ் சூழப் - படரும்  | 46 | 
தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனே மணிக்கடகங் கையில் வயங்கப் - பிணிப்பின்  | 47 | 
முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்த வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா  | 48 | 
அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்பப் - பொருந்திய  | 49 | 
அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்து வண்ணத் தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன்  | 50 | 
காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு தாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங்  | 51 | 
பட்டத்து யானை  | |
கோலத் தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று காலத் ததிருங் கடாக்களிறு - ஞாலத்துத்  | 52 | 
தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர் வானே முழங்கினுமவ் வான்றடவி - வானுக்  | 53 | 
கணியு மருப்பு மடற்கையு மின்மை தணியும் யமராச தண்டம் - தணியாப்  | 54 | 
பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற் கரிய தொருதானே யாகிக் - கரிய  | 55 | 
மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும் கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட  | 56 | 
ஊறு மதந்தனதே யாக வுலகத்து வேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்றத்  | 57 | 
தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும் வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய  | 58 | 
கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன் முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற  | 59 | 
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம் பருத்த கடாந்திறந்து பாயப் - பெருக்கத்  | 60 | 
துவற்று மதுரச் சுவடிபிடித் தோடி அவற்றி னபரங்கண் டாறி - இவற்றை  | 61 | 
அளித்தன னெங்கோமா னாதலா லின்று களித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய  | 62 | 
வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில் ஏற்றுப் பொருமன்ன ரின்னுயிரைக் - கூற்றுக்  | 63 | 
கருத்து மயிரா பதநின் றதனை இருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தக்க  | 64 | 
கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக் கற்றைக் கவரியிளங் காலசைப்ப - ஒற்றை  | 65 | 
வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப சிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து  | 66 | 
வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக் கோட்புலிக் கொற்றக் கொடியோங்கச் -சேட்புலத்துத்  | 67 | 
உடன் வருவோர்  | |
தென்னரு மாளுவருஞ் சிங்களருந் தேற்றுதகை மன்னருந் தோற்க மலைநாடு - முன்னம்  | 68 | 
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல்  | 69 | 
ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள் பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத்  | 70 | 
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும்  | 71 | 
கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும் கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன்  | 72 | 
முனியும் பொழுது முரிபுருவத் தோடு குனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன்  | 73 | 
தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர் வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா  | 74 | 
மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக் கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப்  | 75 | 
புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க ஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம்  | 76 | 
தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க வாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும்  | 77 | 
கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும் ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா  | 78 | 
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக் கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச்  | 79 | 
செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக்  | 80 | 
கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில் விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம்  | 81 | 
வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும் பாரித் தவனனந்த பாலனும் -பேரமரில்  | 82 | 
முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும் மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழக்  | 83 | 
காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து  | 84 | 
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல் கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய  | 85 | 
மான வரச ரிரிய வடகலிங்கத் தானை துணித்த வதிகனும் - மீனவர்தம்  | 86 | 
கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன் வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரணக்  | 87 | 
கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்த செங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து  | 88 | 
வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும் வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும்  | 89 | 
என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர் முன்னு மிருமருங்கு மொய்த்தீண்டப் - பன்மணிசேர்  | 90 | 
குழாங்கள்  | |
சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார் வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன்  | 91 | 
சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த பூந்துவரை யந்தப் புரம்போன்றும் - ஏந்திப்  | 92 | 
பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை புரக்குந் திருநாடு போன்றும் - வரக்கருதா  | 93 | 
ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன் சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங்  | 94 | 
கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும் கொண்டலின் மின்னுக் குழாம்போன்றும் - மண்டும்  | 95 | 
திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும் வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய்  | 96 | 
இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச் சிந்தை பரப்பித் தெருவெங்கும் - வந்தீண்டி  | 97 | 
உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப் பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின்  | 98 | 
இணங்கு மமுத கலசங்க ளேந்தி வணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு  | 99 | 
பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய் கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க  | 100 | 
வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கி உரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும்  | 101 | 
வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும் பாணி பெயர்ப்பப் பதம்பெயர்த்துச் -சேணுயர்  | 102 | 
மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில் விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சனக்  | 103 | 
கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும் மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற  | 104 | 
வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு வீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி  | 105 | 
உருவி னொளியி னுணர்வி னுரையிற் பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து  | 106 | 
குழாங்களின் கூற்று  | |
சீரள வில்லாத் திருத்தோ ளயன்படைத்த பாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின்  | 107 | 
செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ வைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே  | 108 | 
ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன் வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும்  | 109 | 
எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார் கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும்  | 110 | 
ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை பாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த  | 111 | 
கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல் செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி  | 112 | 
பேதை  | |
வந்து பிறந்து வளரு மிளந்திங்கள் கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத்  | 113 | 
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல் வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின்  | 114 | 
பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம்  | 115 | 
தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப் பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு  | 116 | 
பாவையு மானு மயிலும் பசுங்கிளியும் பூவையு மன்னமும் பின்போதக் - காவலன்  | 117 | 
பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகை நன்னித் திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன்  | 118 | 
கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார்  | 119 | 
வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண் ஆதி யுகம்வந் தடிக்கொள்ள - மேதினிமேல்  | 120 | 
ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன் மூன்று முரச முகின்முழங்க - வான்றுணைத்  | 121 | 
தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன்  | 122 | 
படியின் மதியும் பகலவனுந் தோற்கும் முடியி லொருகாலு மூளா - வடிவில்  | 123 | 
மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும் நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து  | 124 | 
சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடா விரிக்குந் திருநிலவின் வீழா - பரிக்கும்  | 125 | 
உலகம் பரவுந் திருப்புருவத் தோரா திலக முகாம்புயத்துச் சேரா - பலவும்  | 126 | 
திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லா இசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக்  | 127 | 
கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா மெய்ம்மலர்ப் பேரொளியின் மீதுறா - அம்மகள்  | 128 | 
கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும் நண்ணுந் தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா  | 129 | 
வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித் தம்மின்க ளென்றுரைப்பத் தாயரும் - அம்மே  | 130 | 
பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே திருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை  | 131 | 
யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத் தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன்  | 132 | 
மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும் ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள் - சேர  | 133 | 
இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும் அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி  | 134 | 
பெதும்பை  | |
மழலை தனது கிளிக்களித்து வாய்த்த குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு  | 135 | 
முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின் பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி  | 136 | 
மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும்  | 137 | 
தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும்  | 138 | 
பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும் பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும்  | 139 | 
மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப் பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்கனகக்  | 140 | 
கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின் முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும்  | 141 | 
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல் மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த  | 142 | 
கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற் பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும்  | 143 | 
கனாக் கூறுதல்  | |
தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே  | 144 | 
தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய் வளரு மொருகுமரி வல்லி - கிளரும்  | 145 | 
கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி எழுந்து கிளைகலிப்ப வேறித் - தொழுந்தகைய  | 146 | 
கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின் பங்குடைய மூரிப் பணையணைந்து - தங்குடைய  | 147 | 
வண்டு முரல மணநாற வைகுவது கண்டு மகிழ்ந்தேன் கனவிலெனக் - கொண்டு  | 148 | 
வருக வருக மடக்கிள்ளை முத்தம் தருக தருகவெனத் தாயர் - பெருக  | 149 | 
விரும்பினர் புல்லி விரைய முலைவந் தரும்பின வாகத் தணங்கே - பெரும்புயங்கள்  | 150 | 
புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன் வல்லி பெறுதி யெனவழுத்தும் -எல்லை  | 151 | 
அரச னபய னகளங்க னெங்கோன் புரசை மதவரைமேற் போத - முரசம்  | 152 | 
தழங்கு மறுகிற் றமரோடு மோடி முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்கட்  | 153 | 
பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு மின்னென வந்து வௌிப்பட்டு - மன்னருயிர்  | 154 | 
உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச் செண்டாற் கிரிதிரத்த சேவகனைத் - தண்டாத  | 155 | 
வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச் சோகங் கெடுத்தணைத்த தோளானை - ஆகத்துக்  | 156 | 
கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக மங்கை பிரியாத மார்பானை - அங்கமலக்  | 157 | 
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும் செய்ய கரிய திருமாலைத் - தையலும்  | 158 | 
கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான் மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியாக்  | 159 | 
காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத் தாமஞ் சரியத் தனிநின்றாள் - நாமவேற்  | 160 | 
சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில் வீரனு மல்வெல்லை விட்டகன்றான் - மாரனும்  | 161 | 
தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப் புக்குத் தொடைமடக்கிப் போயினான் - மைக்குழல்  | 162 | 
மங்கைப் பருவத் தொருத்தி மலர்பொதுளுங் கங்கைப் புளினக் களியன்னம் - எங்கோனை  | 163 | 
மன்னனை மன்னர் பிரானை வரோதயனை தென்னனை வானவனைச் செம்பியனை- முன்னொருநாள்  | 164 | 
கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தாற் கொண்ட பரிவு கடைக்கூட்ட - புண்டரிகச்  | 165 | 
செய்ய வடிமுதலாச் செம்பொன் முடியளவும் மைய லகல மனத்திழைத்துக் - கையினால்  | 166 | 
தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம் காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண்  | 167 | 
டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத் தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி  | 168 | 
வருகின்றா னென்று மணியணிகள் யாவும் தருகென்றாள் வாங்கித் தரித்தாள் - விரிகோதை  | 169 | 
சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே றாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர்  | 170 | 
மங்கை தன்னையே ஐயுறுதல்  | |
காட்டும் படிமக் கமலத்துக் கமலத்தை ஓட்டும் வதனத் தொளிமலர்ந்து - கேட்டு  | 171 | 
விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும் படைபோய் வருவனபோற் பக்கம் - கடைபோய்  | 172 | 
மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் - நெறிக்கும்  | 173 | 
அளக முதலாக வைம்பாற் படுத்த வளர்கருங் கூந்தன் மலிந்துங் - கிளர  | 174 | 
அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள் பரியன காம்பிற் பணைத்தும் - தெரியற்  | 175 | 
சுவடு படுகளபத் தொய்யில்சூழ் கொங்கை குவடு படவெழுச்சி கொண்டும் - திவடர  | 176 | 
முந்துங் கலையல்குன் மூரித் தடமகன்றும் நொந்து மருங்கு னுடங்கியும் - வந்து  | 177 | 
மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ அடையுந் தனதுருக்கண் டஞ்சிக் - கொடையனகன்  | 178 | 
பண்டறியு முன்னைப் பருவத் துருவத்துக் கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும்  | 179 | 
முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி என்னை யறிகலன்யா னென்செய்கேன் - தன்னை  | 180 | 
வணங்கி வருவ தறிவ னெனவந் திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும்  | 181 | 
இறைவ னகளங்க னெங்கோன் குமரித் துறைவ னிருபகுல துங்கன் - முறைமையால்  | 182 | 
காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர் பூக்கு முலகளந்த பொற்கழலும் - நோக்கும்  | 183 | 
திருக்கொள்ளு மார்பமுந் தெவ்வேந்த ரெல்லாம் வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும்  | 184 | 
மகரக் குழைக்காது மாதரார் மாமை நுகரப் புடைபெயரு நோக்கும் - துகிரொளியை  | 185 | 
வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும் செவ்வி யழியாத் திருமுகமும் - எவ்வுருவும்  | 186 | 
மாறுபடா வண்ணமுந்தன் வண்ணப் படிவத்து வேறு படுவனப்பு மெய்விரும்பித் -தேறிப்  | 187 | 
பிறையாம் பருவத்துப் பேருவகை யாம்பல் நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் - கிறைவனைக்  | 188 | 
கண்டு மனமு முயிருங் களிப்பளவிற் கொண்டு பெயர்ந்து கொல்யானை - பண்டு  | 189 | 
நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல கனவு தரவிரவிற் கண்டு - மனமகிழ்வாள்  | 190 | 
தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும் நாட்ட முறங்கா மையுநல்க - மீட்டுப்  | 191 | 
பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ்ந் தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் - சயந்தொலைய  | 192 | 
மடந்தை  | |
வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு வந்து திரண்டனைய வாயினாள் - அந்தமில்  | 193 | 
ஓலக் கடலேழு மொன்றா யுலகொடுக்கும் காலக் கடையனைய கட்கடையாள் - ஞாலத்தை  | 194 | 
வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள் கோட்டி யிருக்குங் குவிமுலையாள் - நாட்ட  | 195 | 
வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர் முடிவு லுணர்வை முடிப்பாள் - கடிதோடிப்  | 196 | 
போகா தொழியா திடையென்று போய்முடியல் ஆகாமை கைவளரு மல்குலாள் - பாகாய  | 197 | 
பந்தாடுதல்  | |
சொல்லி யொருமடந்தை தோழியைத் தோள்வருந்தப் புல்லி நிலாமுற்றம் போயேறி - வல்லிநாம்  | 198 | 
சேடிய ரொப்ப வகுத்துத் திரள்பந்து கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - ஓடினால்  | 199 | 
என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான் தன்மாலை வாங்கித் தருகென்று - மின்னனையான்  | 200 | 
வட்டித் தளகமுங் கொங்கையும் வார்தயங்கக் கட்டிக் கனபந்து கைப்பற்றி - ஒட்டிப்  | 201 | 
பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே இருதிறத்துக் கந்துகமு மேந்திப் - பெரிதும்  | 202 | 
அழுந்து தரளத் தவைதன்னைச் சூழ விழுந்து மெழுந்து மிடைய - எழுந்துவரி  | 203 | 
சிந்த விசிறு திரையி னுரையூடு வந்த வனச மகளேய்ப்ப - முந்திய  | 204 | 
செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென் றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்பத் - தங்கள்  | 205 | 
நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென் றடங்குங் கலாப மரற்றத் - தொடங்கி  | 206 | 
அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்குப் பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்தெழும்  | 207 | 
கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க - அக்கோதை  | 208 | 
பந்தாடி வென்று பருதி யகளங்கன் சந்தாடு தோண்மாலை தாவென்று - பைந்துகிற்  | 209 | 
றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ் யானைமேல் வெண்சா மரையிரட்டச் - சேனை  | 210 | 
மிடையப் பவளமு நித்திலமு மின்ன அடையப் பணிலங்க ளார்ப்ப - புடைபெயர  | 211 | 
வார்ந்து மகர வயமீன் குலமுழுதும் போந்து மறுகு புடைபிறழச் - சேர்ந்து  | 212 | 
பதலை முழங்கப் பகட்டேற்றி விட்ட மதலைகண் முன்னர் மலிய - விதலையராய்த்  | 213 | 
தாழுந் தொழிலிற் கிளைபுரக்கத் தன்னடைந்து வாழும் பரதர் மருங்கீண்ட - வீழுந்திக்  | 214 | 
கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும் பொன்னியுந் தோயும் புகார்விளங்க - மன்னிய  | 215 | 
செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும் தங்கோ மறுகிற் றலைப்பட்டுத் - தங்களில்  | 216 | 
ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும் கட்டிய மேகலையுங் காவாதே - கிட்டித்  | 217 | 
தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள் அழுதா ளொருதமிய ளானாள் - பழுதிலாக்  | 218 | 
காக்குந் துகிலு மிலங்கு பொலன்கலையும் போக்கு நிதம்பம் புனைகென்று - வீக்கும்  | 219 | 
மணிக்கச்சுந் தம்முடைய வான்றூசுங் கொங்கை பணிக்கக் கடைக்கண் பாரா - அணிக்கமைந்த  | 220 | 
குன்றாத நித்திலக் கோவையும் பொன்னிறத்த பொன்றாத பட்டும் புனைகென்று - நின்று  | 221 | 
கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -கடுத்துக்  | 222 | 
கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித் தவரு முதுகிளவித் தாய - ரவரெங்கும்  | 223 | 
கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து பூசினா ராலி பொழிந்தொழிந்தார் - வீசினார்  | 224 | 
இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் - விட்டாரோ  | 225 | 
பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல் உள்ள முயிரை யுடன்கொண்டு -வள்ளல்பின்  | 226 | 
ஓதை மறுகி லுடன்போன போக்காலிப் பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில்  | 227 | 
அரிவை  | |
வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ் வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர்த்  | 228 | 
தட்டுஞ் சிறுகப் பெருகி மரகதத்தாற் கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டும்  | 229 | 
துகிலுங் கரப்பச் சுடர்பரப்பக் கைபோய் அகில்கின்ற வல்கு லரிவை - இகலி  | 230 | 
ஒருக்கி மருங்குகடிந் தொன்றினைவந் தொன்று நெருக்கிய மாமை நிரம்பித் - தருக்கி  | 231 | 
இடங்கொண்டு மின்னுக் கொடியொன் றிரண்டு குடங்கொண்டு நின்றதெனக் கூறத் - தடங்கொண்  | 232 | 
டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம் பிணைத்துத் தடமுகட்டிற் பெய்து - பணைத்துப்  | 233 | 
பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞாலத் தருமை படைத்ததனத் தன்னம் - கருமை  | 234 | 
எறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை குறித்துக் குழையளவுங் கொண்டு -மறித்து  | 235 | 
மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள் பதைத்து விழநிறத்திற் பட்டுத் - ததைத்த  | 236 | 
கழுநீர் மலரின் கவினழித்து மானின் விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும்  | 237 | 
நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர்  | 238 | 
வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர் சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்து  | 239 | 
திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின் பெருவிருந்து பேணுங் குழலாள் - பொருகளிற்றின்  | 240 | 
வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன் தந்த பெரிய தனிமைக்கண் - செந்தமிழ்க்  | 241 | 
கோனே கவர்ந்தெம்மைக் கொண்டனன் வந்தெமக்குத் தானே தரிற்றருக வென்பனபோல் - பூநேர்  | 242 | 
இணைக்கையுந் தோளு மிடுதொடிக ளேந்தா துணைக்கண் டுயிற்றத் துயிலா - மணிக்கூந்தல்  | 243 | 
போது மறந்தும் புனையா பொலங்கச்சு மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி  | 244 | 
அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல் கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா - தெடுக்கும்  | 245 | 
கருப்புச் சிலையனங்கன் கையம்பால் வீழும் நெருப்புக் குருகி நிறைபோய் - இருப்புழிப்  | 246 | 
பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி ஆடிய தோகைக்கு மன்பின்றிக்- கூடிய  | 247 | 
கிள்ளைக்குந் தம்மிற் கிளரு மிளவன்னப் பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோய்க் - கொள்ளை  | 248 | 
பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படப்பை நயக்கு மிளமரக்கா நண்ணி - வயக்களிற்று  | 249 | 
மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால் அன்னங்கா ணீரென் றழிவுற்றும் - சென்னி  | 250 | 
பெருகும் புகாரடையப் பெற்றீரான் மற்றைக் குருகுகா ளென்று குழைந்தும் - கருகிய  | 251 | 
நீலக் குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டுச் சோலைப் பயில்வீ ரெனத்துவண்டும் - பீலிய  | 252 | 
பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும் நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் - நேரியன்  | 253 | 
தண்டுணர்ப்பே ராரம் பலகாலுந் தைவந்து வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் - தொண்டிக்கோன்  | 254 | 
மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே தென்றல் வருவ தெனத்திகைத்தும் - நின்றயர்கால்  | 255 | 
மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள் முன்னர்ப் பணில முழங்குதலும் - மின்னிற்போய்  | 256 | 
பேணுந் திருமடனு மென்றும் பிரியாத நாணும் பெருவிருப்பா னல்கூரக் - காணுங்கால்  | 257 | 
ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் - போய்ப்பெருகும்  | 258 | 
மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும் போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி  | 259 | 
குழைய நடுவொடுக்குங் கொங்கையுந் தோளும் பழைய படியே பணைத்தான் - பிழையாத  | 260 | 
பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத்தகுவார் தன்னிற் பிறரின்மை சாதித்தாள் - சென்னிக்குப்  | 261 | 
பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும் வாரா விருப்பு வருவித்தான் - ஓராங்கு  | 262 | 
தெரிவை  | |
கோது விரவாக் கொழும்பாகு கொய்தளிரீன் போது புலராப் பொலங்கொம்பு - மீது  | 263 | 
முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற் புயலா லழுங்காப் புதுமின் - இயல்கொண்  | 264 | 
டெழுதாத வோவிய மேழிசைய வண்டு கொழுதாத கற்பகத்தின் கொம்பு - முழுதும்  | 265 | 
இருளாக் கலாபத் திளந்தோகை யென்றும் தெருளாக் களியளிக்குந் தேறல் - பொருளால்  | 266 | 
வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும் அருந்தத் தெவிட்டா வமுதம் - திருந்திய  | 267 | 
சோலைப் பசுந்தென்ற றூதுவர வந்தி மாலைப் பொழுதுமணி மண்டபத்து - வேலை  | 268 | 
விரிந்த நிலாமுன்றில் வீழ்மகரப் பேழ்வாய் சொரிந்த பனிக்கற்றை தூங்கப் - பரிந்துழையோர்  | 269 | 
பூசிய சாந்தங் கமழப் பொறிவண்டு மூசிய மௌவன் முருகுயிர்ப்பத் - தேசிகப்  | 270 | 
பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும் சேர வினிதிருந்த செவ்விக்கண் - நேரியும்  | 271 | 
தசாங்கம்  | |
கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும் பாழி யயிரா பதப்பகடும் - ஆழியான்  | .272 | 
சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும் காடு திரைத்தெறியுங் காவிரியும் - பாடுகென  | 273 | 
கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் - தேனியிர்  | 274 | 
தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான் றைவந்தான் வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் - முந்த  | 275 | 
நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன் திறன்மதனு மம்பு தெரிந்தான் - விறலியொடும்  | 276 | 
பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான் தூணி தொலையச் சுளிந்துவேள் - மாண  | 277 | 
இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த  | 278 | 
வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம்  | 279 | 
வாடை யனைய மலயா நிலந்தனையும் கோடை யிதுவென்றே கூறினான் - நீடிய  | 280 | 
வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி நீரை யிதுவோ நெருப்பென்றான் - ஊரெலாம்  | 281 | 
காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன் தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும்  | 282 | 
வாழு முலகத் தெவரு மனங்களிப்ப வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன்  | 283 | 
எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் - கங்குல்  | 284 | 
புலருந் தனையும் புலம்பினா ளாங்குப் பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ்  | 285 | 
ஆழிப் புவன மடைய வுடையபிரான் சூழிக் கடாயானை தோன்றுதலும் -யாழின்  | 286 | 
யானையை நோக்கிக் கூறுதல்  | |
இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா துழைக்கு முயிர்தழைப்ப வோடிப் - பிழைத்னளாய்  | 287 | 
முட்டுந் திகிரி கிரியின் முதுமுதுகிற் கட்டுங் கடவுட் கடாயானை - யெட்டும்  | 288 | 
தரிக்கு முலகந் தனிதரித்த கோனைப் பரிக்கு மயிரா பதமே - செருக்கிப்  | 289 | 
பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி இருந்த வடவரைக ளெல்லாம் - திருந்தா  | 290 | 
விதையம் பொருதழிந்த விந்தமே போலப் புதைய நடந்த பொருப்பே - சிதையாாத  | 291 | 
திங்கட் குலத்திற்குந் தெய்வப் பொதியிற்கும் அங்கட் பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள்  | 292 | 
படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ இடிக்குந் தனியசனி யேறே - கடிப்பமைந்த  | 293 | 
யாம முரசா லிழந்த நிறைநினது தாம முரசு தரப்பெற்றேன் - நாம  | 294 | 
விடைமணி யோசை விளைத்தசெவிப் புண்ணின் புடைமணி யோசைப் புலர்ந்தேன் - தடைமுலைமேல்  | 295 | 
ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில் மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக்  | 296 | 
கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய  | 297 | 
காருலா மோதக் கடல்முழங்க வந்ததுயர் நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில்  | 298 | 
என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம் நின்மே லன்கன்வர நீங்கினேன் - இன்னும்  | 299 | 
கடைபோல வென்னுயிரைக் காத்தியேல் வண்டு புடைபோகப் போதும் பொருப்பே - விடைபோய்நீ  | 300 | 
ராட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி காட்டுந் தடமே கலக்குவாய் - கேட்டருளாய்  | 301 | 
கார்நாணு நின்கடத்து வண்டொழியக் காமனார் போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன்  | 302 | 
செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார் வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட்  | 303 | 
குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய் அயிரா பதமேநீ யன்றே - பெயராது  | 304 | 
நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி - கொற்கையர்கோன்  | 305 | 
பேரிளம் பெண்  | |
மல்லற் புயத்தினகன் மால்யானைக் கைபோலக் கொல்லத் திரண்ட குறங்கினாள் - எல்லையில்  | 306 | 
கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவேய்ந் தாடும் படமனைய வல்குலான் - சேடியாய்த்  | 307 | 
தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்குக் கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் - செம்மை  | 308 | 
நிறையு மழகா னிகரழித்துச் செய்யாள் உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் - நறைகமழும்  | 309 | 
மாலை பலபுனைந்து மான்மதச் சாந்தெழுதி வேலை தருமுத்த மீதணிந்து - சோலையில்  | 310 | 
மானு மயிலு மனைய மடந்தையரும் தானு மழகு தரவிருப்பத் - தேனிமிர்  | 311 | 
ஊற விளம்பாளை யுச்சிப் படுகடுந் தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் - வேறாக  | 312 | 
வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும் போக்கி யொருத்தி புகழ்ந்துகா - நோக்கி  | 313 | 
வருந்திச் சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி அருந்தித் தமர்மே லயர்ந்தாள் - பொருந்தும்  | 314 | 
மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன் நயக்கத் தகுங்கனவு நல்கும் - முயக்கத்து  | 315 | 
மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும் ஒக்க விகல வுடனெழுந்து - பக்கத்து  | 316 | 
வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில் தந்த தனதுநிழ றானோக்கிப் - பைந்துகிர்க்  | 317 | 
காசுசூ ழல்குற் கலையே கலையாகத் தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர்  | 318 | 
சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல் ஆடிய சாந்தி னணிசிதைந்து - கூடிய  | 319 | 
செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு  | 320 | 
கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக் கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுசூழ்  | 321 | 
வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற் பூரித்த மெய்யுவகை பொய்யாகப் - பாரித்த  | 322 | 
தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன் நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும்  | 323 | 
கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக் கொண்டது மம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற்  | 324 | 
செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற் கெய்த வருமோ விவையென்று - கைதொழுது  | 325 | 
தேறி யொருகாலுந் தேறாப் பெருமையல் ஏறி யிரண்டா வதுமயங்கி - மாறிலாத்  | 326 | 
தோழியர் தோண்மே லயர்ந்தாளத் தோழியரும் ஏழுயர் யானை யெதிரோடி - ஆழியாய்  | 327 | 
மாடப் புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும் கூடற்குங் கோழிக்குங் கோமானே - பாடலர்  | 328 | 
சாருந் திகிரி தனையுருட்டி யோரேழு பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றிக்  | 329 | 
காத்துக் குடையொன்றா லெட்டுத் திசைகவித்த வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால்  | 330 | 
ஏனைக் கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமே - மானப்போர்  | 331 | 
இம்ப ரெழுபொழில் வட்டத் திகல்வேந்தர் செம்பொன் மவுலிச் சிகாமணியே - நம்பநின்  | 332 | 
பாரிற் படுவன பன்மணியு நின்கடல் நீரிற் படுவன நித்திலமும் - நேரியநின்  | 333 | 
வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டுப் பொற்பின் மலிவன பூந்துகிலும் - நிற்பணியக்  | 334 | 
கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும் தண்டா நிறையுந் தளிர்நிறமும் - பண்டைத்  | |
துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர் பயிலுந் திருநூற் படியோ - புயல்வளவ  | 336 | 
மன்னிய தொண்டை வளநாடு வாளியும் பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித்  | 337 | 
திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால் திருநாண் மடமகளிர் தம்மை - ஒருநாளவ்  | 338 | 
வேனற் கரசன் விடுமே யவன்சினமிப் பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே - ஆனக்கால்  | 339 | 
குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி ஒன்றே யுலகுக் கொழியுமே - என்றினைய  | 340 | 
கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற் சீறி யனங்கன் சிலைவளைப்ப - மாறழியக்  | 341 | 
குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி உத்துங்க துங்க னுலா.  | 342 | 
வெண்பா  | |
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும் செய்ய கரிய திருமாலே - வையம் அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்.விக்கிரம சோழனுலா முற்றிற்று  | 
2. குலோத்துங்க சோழனுலா 
| தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல்  | 1 | 
மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர உருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற்  | 2 | 
பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர் ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத்  | 3 | 
துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர் எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும்  | 4 | 
அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில் ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை  | 5 | 
எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற்  | 6 | 
போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர் மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில்  | 7 | 
வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப்  | 8 | 
பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண் டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி  | 9 | 
மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன் தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா  | 10 | 
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக் கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும்  | 11 | 
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க  | 12 | 
வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய  | 13 | 
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன்  | 14 | 
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத்  | 15 | 
தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக்  | 16 | 
கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத் துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு  | 17 | 
மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள் கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள்  | 18 | 
பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு  | 19 | 
படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச்  | 20 | 
சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும் ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப்  | 21 | 
பிரம வரக்க னகலம் பிளந்து பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர்  | 22 | 
தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும் ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும்  | 23 | 
ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக்  | 24 | 
கங்கா நதியுங் கடாரமுங் கைவரச் சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன்  | 25 | 
புவிராச ராசர் மனுமுதலோர் நாளில் தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர்  | 26 | 
போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள் ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார்  | 27 | 
விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன்  | 28 | 
கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை  | 29 | 
இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில் வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை  | 30 | 
மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன் கனகளபன் - யாதினும்  | 31 | 
தீட்டக் கரிய திருவே திருமாலை சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு  | 32 | 
முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம் சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு  | 33 | 
மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும் பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம்  | 34 | 
தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில்  | 35 | 
ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண் தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க  | 36 | 
புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும் அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய்  | 37 | 
தில்லையிற் செய்த திருப்பணிகள்  | |
ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக் கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற்  | 38 | 
றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற்  | 39 | 
றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல் அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன்  | 40 | 
அலகை யிகந்த அசலகுல வச்ரப் பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக்  | 41 | 
காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம்  | 42 | 
தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண் டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய  | 43 | 
தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த பாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய  | 44 | 
பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால் திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க  | 45 | 
நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த கோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான்  | 46 | 
ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப்  | 47 | 
பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய வலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள்  | 48 | 
நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க மலையேழு மென்ன வகுத்துத் - தலையில்  | 49 | 
மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச் சிகரங்க ளாகித் திகழ - நிகரில்  | 50 | 
எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும் விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற்  | 51 | 
கடாரப் பனிநீர் கவினிக் கனபொற் றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின்  | 52 | 
றற்பக லாக வனந்த சதகோடி கற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண்  | 53 | 
வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த சுரமகளி ராகித் துறும - ஒருதான்  | 54 | 
பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம் மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும்  | 55 | 
இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள் திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர்  | 56 | 
புனையா மணியாலும் பொன்னாலு மின்ன மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன்  | 57 | 
திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப் பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற்  | 58 | 
பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும் கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள்  | 59 | 
புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம் பவனி யெழுச்சி பணித்துக் -கவினும்  | 60 | 
மடமயி லொக்க மகுடங் கவித்தாள் உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில்  | 61 | 
அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை  | 62 | 
வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத் தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற்  | 63 | 
கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும்  | 64 | 
உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத் திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப்  | 65 | 
பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற் கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர  | 66 | 
வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத் திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற்  | 67 | 
கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள் பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல்  | 68 | 
வந்த வனச மகளேபோன் மற்றது தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச்  | 69 | 
சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த உரக பணாமணி யொப்ப - விரவி  | 70 | 
மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச் சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில்  | 71 | 
முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில் வடியு நிலவு மலையப் - படியில்  | 72 | 
வயங்கு கடக மகுடாதி மின்னத் தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய  | 73 | 
செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம் வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய  | 74 | 
நாவியு மான்மதச் சாந்து நறையகில் ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய  | 75 | 
தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக் கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை  | 76 | 
வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப் போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில்  | 77 | 
மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும் வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட்  | 78 | 
கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும் வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா  | 79 | 
முதுவாய் வடவையு முந்நான்கு கோளும் கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய்  | 80 | 
அபயங் கொடுக்கு மயிரா பதத்தை உபய வயக்கோட் டுருமை - விபவ  | 81 | 
நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற் றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க  | 82 | 
பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய  | 83 | 
ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு மற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக்  | 84 | 
கவரி யிரட்டக் கடவுண் முரசார்த் துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும்  | .85 | 
சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும் எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து  | 86 | 
விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப் பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின்  | 87 | 
மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச் சிலையான் வரவு தெரியத் - தொலையாது  | 88 | 
வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால் வாசவன் வந்த வரவறியக் - கூசாதே  | 89 | 
யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும்  | 90 | 
பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத் தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப்  | 91 | 
பரவி யுலகிற் பலமண்ட லீகர் புரவி மிசைகொண்டு போத - அருவிபோல்  | 92 | 
விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம் எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி  | 93 | 
இரவிக்கு நிற்பன வேழு மொழியப் புரவிக் குலமுழுதும் போத - விரவி  | 94 | 
உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே  | 95 | 
எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம் விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய  | 96 | 
விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம் மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய  | 97 | 
மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர் பூகத ராயினார் போற்பரவ - நாகர்  | 98 | 
கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத் தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள  | 99 | 
கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய  | 100 | 
சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ்  | 101 | 
தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர் நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார்  | 102 | 
மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார் சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும்  | 103 | 
இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத் திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட  | 104 | 
கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும் பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு  | 105 | 
நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன் இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள்  | 106 | 
மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக் காகாள மென்னும் படிகலிப்பப் - போகத்  | 107 | 
தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ் மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன்  | 108 | 
சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர் சேனா பராக மெனத்திகழப் - பூநாறும்  | 109 | 
கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய் வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில்  | 110 | 
இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன் மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர்  | 111 | 
முதுகுல மன்னர் முடிவணங்க வந்த விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற்  | 112 | 
கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர் எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும்  | 113 | 
தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும் யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய  | 114 | 
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும் தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை  | 115 | 
ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற்  | 116 | 
சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும்  | 117 | 
துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில் நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே  | 118 | 
வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக் கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி  | 119 | 
முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற் பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன்  | 120 | 
பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான்  | 121 | 
உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார்  | 122 | 
பேதை  | |
இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற் புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர்  | 123 | 
ஆடாத தோகை யலராத புண்டரிகம் பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத்  | 124 | 
தளிராத சூதந் தழையாத வஞ்சி குளிராத திங்கட் குழவி - அளிகள்  | 125 | 
இயங்காத தண்கா விறக்காத தேறல் வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க்  | 126 | 
கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம் ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும்  | 127 | 
நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம்  | 128 | 
தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை மிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார்  | 129 | 
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல்  | 130 | 
மன்னன் புனையுந் திருமுத்த மாலையை அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன்  | 131 | 
கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும் பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை  | 132 | 
அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி  | 133 | 
தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப்  | 134 | 
பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத்  | 135 | 
தற்புத வல்லி யவளே பிறந்துடைய கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர்  | 136 | 
பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி  | 137 | 
போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன்  | 138 | 
ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன்  | 139 | 
இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும் அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும்  | 140 | 
முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும் கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான்  | 141 | 
சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து  | 142 | 
விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம் கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா  | 143 | 
வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென் றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை  | 144 | 
கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச் சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி  | 145 | 
இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன்  | 146 | 
பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக் கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற்  | 147 | 
சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக்  | 148 | 
கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர் ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய்  | 149 | 
காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய  | 150 | 
பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந்  | 151 | 
தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால்  | 152 | 
செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம்  | 153 | 
கூறு மவையிவை யென்று குறுந்தொடி வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும்  | 154 | 
ஒருத னடியின் மடிய வுபய மருது பொருது வயவன் - விருதன்  | 155 | 
விலையி லமுத மதன விமலை முலையின் முழுகு முருகன் - வலைய  | 156 | 
கனக சயில வெயிலி கணவன் அனக னதுல னமலன் - தினகரன்  | 157 | 
வாசவன் றென்னன் வருண னளநேசன் கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை  | 158 | 
ஆழிப் பெருமா னபய னனபாயன் சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது  | 159 | 
சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும்  | 160 | 
கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி ஓடு நகாதே யுடையாதே - பீடுற  | 161 | 
வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த்  | 162 | 
தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய்  | 163 | 
சூதள வல்ல துணைமுலை தூயகண் காதள வல்ல கடந்தனபோய் - மாதர்  | 164 | 
உருவத் தளவன் றொளியோக்க மாக்கம் பருவத் தளவன்று பாவம் - தெருவத்  | 165 | 
துடைவ துடையாதா முள்ள முறவோர்ந் தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து  | 166 | 
சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன் தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும்  | 167 | 
ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன் காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந்  | 168 | 
தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன் காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள்  | 169 | 
எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால்  | 170 | 
மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும் செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார்  | 171 | 
வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக் கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை  | 172 | 
ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும் வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள்  | 173 | 
நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன் புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய  | 174 | 
பல்லிய மன்று பரராச கேசரி வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய  | 175 | 
கல்லார மன்று கதிரோன் றிருமருமான் மெல்லார மென்று விளம்பியும் - நல்லார்  | 176 | 
அருத்தி யறிவா ரவையிவை யென்று திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி  | 177 | 
மங்கை  | |
உருவ வரிக்க ணொழுக வொழுகப் புருவ முடன்போதப் போத - வெருவி  | 178 | 
வனமுலை விம்மி வளர வளரப் புனைதோள் புடைபோதப் போத - வினைவர்  | 179 | 
அருங்கலை யல்கு லகல வகல மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு  | 180 | 
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை வரவர வாற்றாத மங்கை - பொரவரு  | 181 | 
தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர்  | 182 | 
அமுத மதியத் தலர்நிலா முற்றும் குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார்  | 183 | 
கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர்  | 184 | 
தண்டா மரையா டலைவனை யாமும்போய் கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை  | 185 | 
ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும் தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம்  | 186 | 
வாவிக் கரையில் வரநீ ரரமகளிர் சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற்  | 187 | 
புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத் தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே  | 188 | 
னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய  | 189 | 
முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங் கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய  | 190 | 
பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ் கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம்  | 191 | 
உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில் வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி  | 192 | 
மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன் கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர்  | 193 | 
நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க நீலமே யன்றி நினையாதாள் - நீலமே  | 194 | 
முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம் தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர்  | 195 | 
நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும் ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே  | 196 | 
இறங்கிய கற்பக வல்லியு மேறி உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க  | 197 | 
வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண் டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள்  | 198 | 
கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின்  | 199 | 
காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும் தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன்  | 200 | 
வௌியே தருவேன் விரையாரத் தொங்கல் கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ  | 201 | 
தாது கடிகமழ் தாதகித் தாமத்தின் போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே  | 202 | 
எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற்  | 203 | 
சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான் சாயன் மயிலே தலைப்படாய் - பாயும்  | 204 | 
கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின் மடமானே தானே வருங்காண் - கடிதென்று  | 205 | 
கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன் பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள  | 206 | 
அலகில் குலநீல ரத்னா பரணம் விலகி வெயிலை விலக்க - உலகிற்  | 207 | 
பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை  | 208 | 
ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும் நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார்  | 209 | 
மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே மின்னனை யாளையு மீதூரா -முன்னர்  | 210 | 
கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும் இடமாதும் யாமென்பார் போலப் - படமாய்  | 211 | 
இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம் நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண்  | 212 | 
முலையாய் வளரு முரட்குவடு கொண்டு மலையாய் நெருங்க வருவார் - தொலையாத  | 213 | 
பாய பருமுத்தின் மாலை பலதூக்கித் தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற்  | 214 | 
கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும் பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ  | 215 | 
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார் தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத்  | 216 | 
தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும் பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார்  | 217 | 
நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள்  | 218 | 
தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா நின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும்  | 219 | 
இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும் நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று  | 220 | 
மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத் தானூங் களிறுந் தடையுண்ட - கோனும்  | 221 | 
தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை அடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த  | 222 | 
திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும் ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை  | 223 | 
எய்தி யனங்க னெழப்போனான் மாதரும் உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற்  | 224 | 
றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும்  | 225 | 
துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம் புகிலும் புகாமே பொராமே - அகினாறும்  | 226 | 
பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய் வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை  | 227 | 
மடந்தை  | |
பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர் முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில்  | 228 | 
வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந்  | 229 | 
தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும் தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற்  | 230 | 
கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண்  | 231 | 
எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும்  | 232 | 
அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல்  | 233 | 
ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப் போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும்  | 234 | 
சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும் உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும்  | 235 | 
கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும் அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி  | 236 | 
அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை மறுகு திருமலர வந்தான் - குறுகும்  | 237 | 
முறுகு கதிரின் முகந்திரிய வேற்று மறுகு திருமலர வந்தான் - குறுகும்  | 238 | 
நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட் குடையாய வெள்ளமுங் கூடி - அடைய  | 239 | 
மதியுதய மென்று வணங்க வனச பதியுதய மென்று பணிய - துதியில்  | 240 | 
ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும் இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில்  | 241 | 
நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய  | 242 | 
பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற் போய மருங்குற் புறநோக்கார் -சாயா  | 243 | 
முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள் நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால்  | 244 | 
உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின் கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும்  | 245 | 
பருவக் கொடிவதன பங்கே ருகத்தின் புருவக் கொடி முடியப் போகா - உருவக்  | 246 | 
களிக்கும் புடவி சதகோடி கற்பம் அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும்  | 247 | 
கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக் கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா  | 248 | 
முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற் புகுந்த திதுவென்று போனான் - திகந்த  | 249 | 
முழுதா ளபயனை முகிணகையுந் தோளும் தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள்  | 250 | 
திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும் சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார்  | 251 | 
முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ் கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே  | 252 | 
ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத் தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம்  | 253 | 
கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை தருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து  | 254 | 
துளவ முகிற்கிது வந்தது தூய வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த  | 255 | 
வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல் புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண்  | 256 | 
இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக் கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின்  | 257 | 
வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை மயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும்  | 258 | 
பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக்  | 259 | 
செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே  | 260 | 
தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும் பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார்  | 261 | 
பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய் மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி  | 262 | 
அரிவை  | |
தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத் தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை  | 263 | 
வளவர் பெருமான் வரும்பவனி யென்று கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத்  | 264 | 
தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன் பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா  | 265 | 
என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும் நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார்  | 266 | 
அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம் எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன்  | 267 | 
மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன்  | 268 | 
சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று காமித் திகழின் கடைதிறப்ப - நேமி  | 269 | 
மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித் தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர்  | 270 | 
வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில் இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக்  | 271 | 
கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம் நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக்  | 272 | 
களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும் கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப்  | 273 | 
பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை பூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை  | 274 | 
அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப்  | 275 | 
பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி எழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர்  | 276 | 
தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில் தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம்  | 277 | 
போல விழுந்து மெழுந்தும் புடையாயம் கோல மறுகு குறுகுவாள் - ஞாலம்  | 278 | 
எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக் கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும்  | 279 | 
மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர்  | 280 | 
வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல் எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து  | 281 | 
வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம் சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய  | 282 | 
பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற்  | 283 | 
புறவுஞ் சகோரமும் பூவையு மானும் பிறவு மினமென்று பெட்ப - உறவாய்  | 284 | 
அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம் தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய்  | 285 | 
மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு மீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே  | 286 | 
அலகு முகமுங் குவிகையு மாகி மலரு முகளமுமானப் - பலர்காணத்  | 287 | 
தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும்  | 288 | 
தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல்  | 289 | 
ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும்  | 290 | 
சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம் நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின்  | 291 | 
அரிவை துகினெகிழ வல்கு லரவின் உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர்  | 292 | 
மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப் பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும்  | 293 | 
ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல் மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய  | 294 | 
வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை ஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த  | 295 | 
பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும் ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன்  | 296 | 
அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள் இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற்  | 297 | 
பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர் பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப்  | 298 | 
பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர் கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை  | 299 | 
என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப்  | 300 | 
தெரிவை  | |
பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர் இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப்  | 301 | 
போதும் பெருமாள் புகுது மளவுமிங் கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம்  | 302 | 
பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும்  | 303 | 
கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே  | 304 | 
கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும் கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி  | 305 | 
எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும் கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து  | 306 | 
முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங் கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம்  | 307 | 
அடியு மிருகையு மம்புய மென்று படியு மொழுங்கிற் பயில -முடியும்  | 308 | 
தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க் கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய  | 309 | 
விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய் எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால்  | 310 | 
ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை ஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும்  | 311 | 
கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை ஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ  | 312 | 
திலக நுதலிற் றிருவேயென் றோதி உலகு வியப்பவென் றோத - அலகிறந்த  | 313 | 
பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை  | 314 | 
பெருமா னனபாயன் பேரிய மூன்றும் தருமா வாரந் தழந்த - ஒருமாதர்  | 315 | 
ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும்  | 316 | 
தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப் போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச்  | 317 | 
சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற் பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர்  | 318 | 
ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால் மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத்  | 319 | 
தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம் இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும்  | 320 | 
உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு பச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம்  | 321 | 
அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க்  | 322 | 
கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர்  | 323 | 
இழியு மொருசாம ரேகையு முந்திச் சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய  | 324 | 
இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல் திசையின் புடையடையச் செல்ல - மிசையே  | 325 | 
பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ சுறையு மரகத மொப்ப - அறையும்  | 326 | 
சிலம்பு சுமவாத செந்தா மரைபோய் உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல  | 327 | 
தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே  | 328 | 
ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத் தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும்  | 329 | 
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய வெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி  | 330 | 
இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில்  | 331 | 
மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள்  | 332 | 
ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக் கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள  | 333 | 
நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி  | 334 | 
முருகு கமழ முகந்து முகந்து பருகு மடமகளைப் பாரா - அருகு  | 335 | 
மடுத்து முயங்கி மயங்கிய தாயர் எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர்  | 336 | 
நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும் நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத  | 337 | 
தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத் துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப்  | 338 | 
பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற் கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி  | 339 | 
அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று தௌிப்பச் சிறிதே தௌிந்தாள் - கிளிக்கிளவி  | 340 | 
பேரிளம்பெண்  | |
மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும்  | 341 | 
தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு  | 342 | 
மறித்து வயிர மடலொன்றின் வாக்கித் தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண்  | 343 | 
டேந்தி முகம னியம்பி யிருந்தொரு காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி  | 344 | 
குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும் விதலை யுலகில் விளைத்து - நுதலை  | 345 | 
வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை அயரா வௌிவிடா வஞ்சாப்- பெயரா  | 346 | 
அருகிருந்த பாணனை நோக்க அவனும் குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக்  | 347 | 
காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும் கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன்  | 348 | 
குரகத மேழு முழுகிக் குளிப்ப மரகத சோதி வயங்கப் - புருவ  | 349 | 
இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப் புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக  | 350 | 
ஏக முருக்கு மலர விளம்பாளைப் பூக மிடறு வரப்பொதிய - போகப்  | 351 | 
பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப் பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய  | 352 | 
நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக் குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து  | 353 | 
சலித்துத் தனியிள வஞ்சி தளரக் கலித்துக் கதலி கவின - ஒலித்தே  | 354 | 
அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும் களிக்கு மயூர கணமும் - விளிக்கும்  | 355 | 
புறவுந் தொடர்ந்துடனே போத வவையே பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன்  | 356 | 
காலை புகுந்து காப்ப தொருபசும்பொற் சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர்  | 357 | 
தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக் கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல்  | 358 | 
வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும் பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும்  | 359 | 
செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும்  | 360 | 
உய்ய விருகாது மூக்கு முடுபதியை நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய  | 361 | 
பவளத் துவர்வாயும் பாதாம் புயமும் கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக்  | 362 | 
சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப் பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின்  | 363 | 
சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன் அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம்  | 364 | 
ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ் வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி  | 365 | 
முடைதழுவு தோளும் முலையுந் தழுவ விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக்  | 366 | 
கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ்  | 367 | 
ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற் கால வுததி கலக்கவும் - சால  | 368 | 
வருந்தா வகைவருந்த வாழி பெயரும் பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய  | 369 | 
குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால் வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக்  | 370 | 
கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய  | 371 | 
சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன்  | 372 | 
முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும் அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி  | 373 | 
மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய் அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர்  | 374 | 
தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற் றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த்  | 375 | 
தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும் எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின்  | 376 | 
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின் வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக்  | 377 | 
காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய் வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல்  | 378 | 
வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங்  | 379 | 
சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற் சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ்  | 380 | 
அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா  | 381 | 
உடல்பிள வோட வொருதேரிடட் டூரும் அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால்  | 382 | 
அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய் இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல  | 383 | 
வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில்  | 384 | 
எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே  | 385 | 
தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா மையலார் போலராய் மன்றேற - வையம்  | 386 | 
பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும் ஒருகுடையான் போந்த னுலா.  | 387 | 
குலோத்துங் சோழனுலா முற்றிற்று  | |
வெண்பா என்றினி மீள்வ தரிதி னிரணியனை அன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே ஆவின்பின் போன வனக னனபாயன் மாவின்பின் போன மனம்  | |
கட்டளைக் கலித்துறை ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம் நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம் பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே.  | 2 | 
3. இராச ராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா
| புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச் செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும்  | 1 | 
காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் - ஓட்டி  | 2 | 
அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி புறவாழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப்  | 3 | 
பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும் நாவிற் பழுதஞ்சி நல்கினோன் - வாவியிற்  | 4 | 
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும் ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால்  | 5 | 
மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப் புறாநினை புக்க புகழோன் - அறாநீர்த்  | 6 | 
தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத் துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள்  | 7 | 
சுரநதி தன்பெய ராகச் சுருதி வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர்  | 8 | 
மல்லன் மரபை ரகுவின் மரபென்று சொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால்  | 9 | 
வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய இந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும்  | 10 | 
ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர் வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது  | 11 | 
சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே  | 12 | 
வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத் தூங்கும் புரிசை துணிந்தகோன் - வீங்கு  | 13 | 
குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும் வடகடற்குந் தென்கடற்கு மன்னன் - தரையின்  | 14 | 
கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின்  | 15 | 
பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன் திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் - பரநிருபர்  | 16 | 
கன்மலை மார்புங் கடவுள் வடமேருப் பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மலைய  | 17 | 
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார்  | 18 | 
தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும் தழும்புடைய சண்டப்ர சண்டன் - எழும்பகல்  | 19 | 
ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன் - சூழி  | 20 | 
மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித் துதகையைத் தீத்த வுரவோன் - முதுவானக்  | 21 | 
கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும் மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி  | 22 | 
அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன் வலைவீசி வாரிய மன்னன் - கொலையானை  | 23 | 
பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் - ஒப்பொருவர்  | 24 | 
பாட வரிய பரணி பசுடொன்றின் கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும்  | 25 | 
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி உலகை முன்காத்த வுரவோன் - பலவும்  | 26 | 
தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப் பரணி புனைந்த பருதி - முரணில்  | 27 | 
புரந்தர னேமி பொருவு மகில துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென்  | 28 | 
றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து சேய பெரிய திருக்குலத்து - நாயகன்  | 29 | 
சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும் மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய  | 30 | 
மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும் சூளிகையு மெத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான்  | 31 | 
கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில் வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம்  | 32 | 
பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும் முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னி  | 33 | 
திருமகன் சீராச ராசன் கதிரோன் மருமக னாகி மறித்தும் - திருநெடுமால்  | 34 | 
ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப் பாதிப் பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற்  | 35 | 
செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க வந்தான் மனுவங்க்ச மாமேரு - முந்தி  | 36 | 
உடுத்த திகிரிப் பதினா லுலகும் அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக்  | 37 | 
கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும் தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும்  | 38 | 
தவன குலதிலகன் றன்பெருந் தேவி புவன முழுதுடைய பூவை - அவனியில்  | 39 | 
எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப் பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள் - மண்பரவ  | 40 | 
ஓகை விளைக்கு முபய குலரத்னத் தோகை யுடனே துயிலெழுந் - தாகிய  | 41 | 
மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித் தீர்த்தத் தபிடேகஞ் செய்தருளிப் - போர்த்திகிரி  | 42 | 
மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் காலைக் கடவ கடன்கழித்து - மூலப்  | 43 | 
பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை வரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிரம்பப்  | 44 | 
பவளச் சடையோன் பணித்த படியே தவளத்ரி புண்டரஞ் சாத்திக் - குவளைப்பூங்  | 45 | 
கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன் போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு - பார்த்திபர்தம்  | 46 | 
தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம் தில்லைதா திருநடனஞ் சிந்தித்து - வல்லவர்  | 47 | 
சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப வேழப் பெருமானை மேல்கொண்டு - வாழி  | 48 | 
அரச வலம்புரி யார்ப்ப வதன்பின் முரசொரு மூன்று முழங்கத் - திரையின்  | 49 | 
சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற் கடவுட் கவிகை கவிப்ப - புடவியின்  | 50 | 
மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன் தீட்டுங் கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத்  | 51 | 
தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து மன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும்  | 52 | 
காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட பூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர்  | 53 | 
பொருவாத பூபால கோபால னென்னும் திருநாம நின்று சிறந்த - வருநாளில்  | 54 | 
தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப் பொன்மாட வீதிப் பொடியடக்கத் - தன்மீது  | 55 | 
கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன் பொன்மாரி பெய்யும் புயலேவப் - பின்னரும்  | 56 | 
காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும் பூமாரி கௌமாரி முன்பொழிய - யாமந்தீர்  | 57 | 
காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய் மாலை வெயிலால் மறித்தொதுங்கக் - கோலப் 58  | |
பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு மருங்கிற் பெரும்புலி மான - நெருங்கிய  | 59 | 
கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன ஒளி மகர வொளியெறிப்பத் - தோளில்  | 60 | 
இருபொறை தீரு மிருபாப் பரசும் இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம்  | 61 | 
தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ் மாமேரு வென்ன முடிவயங்கப் - பூமேற்  | 62 | 
புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே குடைநிலவுஞ் சக்ரகிரி கோல - உடையதன்  | 63 | 
கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும் தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப் - பெய்கணைத்  | 64 | 
தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும் பூணித் தனங்கவேண் முன்போத - மாணிக்கக்  | 65 | 
கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப் பாவையாற் கொல்லிப் பனிவரையாய் - ஓவாது  | 66 | 
செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய் வெய்ய புலிமுழங்க மேருவாய் - வையகஞ்சூழ்  | 67 | 
கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய் வார்சுவரி யாலிமய மால்வரையாய் - வேரி  | 68 | 
விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி கொடுங்குழையார் வீதி குறுக - நடுங்காமல்  | 69 | 
குழாங்கள்  | |
விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள் மண்ணாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல்  | 70 | 
சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர வாள கிரியர மங்கையரும் - தோளிணையால்  | 71 | 
கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த ஆழியிற் கொண்ட வரம்பையரும் - ஊழியின்  | 72 | 
சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால் வாய்த்த வரையர மாதரும் - போய்த்தனியே  | 73 | 
கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட வேதண்டலோக விமலையரும் - காதலால்  | 74 | 
தந்த பணிபதி தன்மகளைச் சேவித்து வந்த கடவுண் மடந்தையரும் - பந்தாடும்  | 75 | 
மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள் வாரும் வரையர மாதரும் - வீரவேள்  | 76 | 
வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன் தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின்  | 77 | 
நிதியோடுங் கூட நிதியோ னளகைப் பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய  | 78 | 
சாய லரமகளிர் தந்தந் திருமரபில் கோயி லுரிமைக் சூழாநெருங்கி - வாயிலும்  | 79 | 
மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும் சூளிகையு மெம்மருங்குந் தோரணமும் - சாளரமும்  | 80 | 
தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும் சுற்றிய பாங்கருந் தோன்றாமே - பற்றி  | 81 | 
மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர் - தயங்கிழையீர்  | 82 | 
குழாங்களின் கூற்று  | |
தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி கற்கோடி செற்ற சிலைகாணீர் - முற்கோலி  | 83 | 
வட்ட மகோததி வேவ வொருவாளி விட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டிச்  | 84 | 
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய  | 85 | 
மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும் பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர்  | 86 | 
இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட கடப்ப முதுமுரசங் காணீர் - கொடுப்பத்  | 87 | 
தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக் கரைகொண்ட போர்முரசங் காணீர் - சரதப்  | 88 | 
பவித்ர விசயப் படைப்பரசு ராமன் கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில்  | 89 | 
மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி  | 90 | 
வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண் பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின்  | 91 | 
றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற்  | 92 | 
பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு வரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற்  | 93 | 
றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள் மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற  | 94 | 
அணைத்தரு காயிர மாயிர மாகப் பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட்  | 95 | 
சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன் பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள  | 96 | 
வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட பாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும்  | 97 | 
திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி இருந்த படிபாரீ ரென்பார் - பெருந்தேவர்  | 98 | 
முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த எக்கொடியு முன்ன ரெடுத்துளவால் - அக்கொடியால்  | 99 | 
தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர் எல்லாருங் காணு மினவென்பார் - புல்லிய  | 100 | 
நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார் போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் - போர்ப்பூவில்  | 101 | 
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த தாதகி யொன்றூமே சார்பென்பார் - மீது  | 102 | 
பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி இரந்தன கொண்டன வென்று - புரந்து  | 103 | 
தனிச்சே வகம்பூமி தன்னதே யாக இனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல்  | 104 | 
மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப் பண்டு கலக்கிய பாற்கடலுட் - கொண்டதோர்  | 105 | 
செங்கோ கனகை திருமார்பி லன்றியே எங்கோ விருப்பா ளினியென்பார் - நங்காய்  | 106 | 
திருப்பதி மாபதி யித்திரு மார்பில் இருப்பது காட்டுமி னென்பார் - சிரித்தெதிரே  | 107 | 
அங்கட் கமலை யமலன் பெருந்தேவி கங்கட் புலனாயி னன்றென்பார் - நங்கைமீர்  | 108 | 
கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும் பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் - வண்ணத்  | 109 | 
தொடித்தா மரையுந் தொழுதன நாபிக் கடித்தா மரைதொழுவேங் காட்டீர் - பிடித்தென்ன  | 110 | 
அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் - உய்த்தால்  | 111 | 
ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற் கிருபெருஞ் சாமரையு மென்பார் - அருவி  | 112 | 
அருகெய்த வொட்டா வயிரா பதத்தின் இருகன்ன சாமரையு மென்பார் - தெருவத்துத்  | 113 | 
தங்களின் மாறாடி யுள்ளந் தடுமாறித் திங்க ணுதலார் தெருமரலும் - அங்கவரில்  | 114 | 
பேதை  | |
பேதைக் குழாத்தொரு பேதை சிலபழங் காதற் குழாத்தோர்தங் கையடைளாள் - மீது  | 115 | 
பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை மறந்தணிய செவ்வி மடமான் - புறந்தணியத்  | 116 | 
தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார்க் கோகை விளைக்கு மொருகரும்பு - பாகைத்  | 117 | 
தொடைபோய முல்லைத் தொடையலே போல இடைபோய தூய வெயிற்றாள் - உடையோன்  | 118 | 
செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும் அறிந்து பிறந்த வறிவோ - நெறிந்தகுழல்  | 119 | 
எம்பாவை யெங்கொல்லிப் பாவை யெனப்பாடும் அம்பாவை பாடும் படியறிவாள் - உம்பர்  | 120 | 
வெருவக் கரையை மிகும்பொன்னி யன்றிப் பருவத்து வேறு படியாள் - உருவக்  | 121 | 
குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞாலத் திறைவனை யல்லா லெழுதாள் - இறைவன்  | 122 | 
முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால் கழங்கேழு மாடக் கருதாள் - வழங்கிய  | 123 | 
முற்றி லெடுத்துக் கொழித்து முழுமுத்தால் சிற்றி லிழைக்கின்ற செவ்விக்கண் -சுற்றும்  | 124 | 
பனிநீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம் துனிநீங்கத் தோன்றிய தோன்றல் - முனியும்  | 125 | 
பொறைவிட் டெயில்விட்டுப் பொய்கை கவிக்குச் சிறைவிட்ட சோளேந்த்ர சிங்கம் - நறைவிட்ட  | 126 | 
அந்தாமச் செங்கழுநீர் மார்ப னழகிய செந்தா மரைக்கட் டிருநெடுமால் - வந்தானை  | 127 | 
ஓகைய ராகி யுலப்பில் பலகோடித் தோகைய ரோடத் தொடர்ந்தோடித் - தாகம்  | 128 | 
தணியத் தணியத் தமரும் பிறரும் பணியப் பணியப் பணிந்தாள் - மணிமார்பில்  | 129 | 
ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள் கோரந் தெரியவுங் கும்பிட்டாள் - வீரன்  | 130 | 
படாகைப் பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட கடாகத் ததிர்முரசுங் கண்டாள் - அடாதனவும்  | 131 | 
சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண் வில்லி யறியாது விட்டதே - நல்லார்சூழ்  | 132 | 
பெதும்பை  | |
மற்று மொருத்தி வலம்புரி யாயிரம் சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள் - சுற்றுடன்  | 133 | 
அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை பின்ன ருடன்பேசப் பேசினாள் - இன்னிசையாழ்  | 134 | 
பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை ஆட வதனுடனே யாடினாள் - கூடிய  | 135 | 
நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி முல்லை முகிழ்க்க நகைமுகிழ்த்தாள் - கொல்லும்  | 136 | 
மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின் குழவி யெயிறெழுச்சி யென்றும் - பழகி  | 137 | 
எறியு மழையெழுச்சி யென்று முலகம் அறியு முலையெழுச்சி யன்னம் - செறியும்  | 138 | 
வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும் திரையேழின் முத்தின் றிரளும் - தரையேழிற்  | 139 | 
பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் - பின்னும்  | 140 | 
பொழிலேழிற் போதும் புனையப் புனைவாட் கெழிலேறும் நாளையே யென்னக் - கழிய  | 141 | 
உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே எழப்போக வெண்ணு மிடையாள் - மழைத்துப்  | 142 | 
புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே கடைபோ யுலகளக்குங் கண்ணாள் - உடையதன்  | 143 | 
சேரிச் சிறுசோறுஞ் சிற்றிலும்போய்ச் சில்லணிபோய்ப் பேரிற் பெருஞ்சோற்றுப் பேரணியாள் - ஒரையில்  | 144 | 
தன்னாய நிற்பத் தனிநா யகன்கொடுத்த மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள் - மென்மலர்  | 145 | 
மேய சிறுமுல்லைப் பந்தர் விடவெடுக்கும் பாய பருமுத்தின் பந்தராள் - நாயக  | 146 | 
உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன் முச்சியிற் சூட்டு முடிக்குரியாள் - நிச்சமும்  | 147 | 
நல்லுயிர்ப் பாவை துணைபெற நாயகன் கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் - மெல்லியற்  | 148 | 
பாங்கிக்கு நங்கோமன் விந்தைப் பசுங்கிளியை வாங்கித் தரப்போய் வணங்கென்பான் - ஆங்கொருத்தி  | 149 | 
மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின் மேயமான் வேண்டி விடப்பெறுவாள் - சேயவொளி  | 150 | 
தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர் என்பாவை பூண வினிதென்பாள் - அன்பால்  | 151 | 
உயிர்த்துணைப் பாங்கி யொருநோன் புணர்த்த எயிர்புறத் தெல்லாருஞ் சூழ - அயிற்படை  | 152 | 
வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி மாரனை நோக்கி வழிபட - மாரன்  | 153 | 
படியில் கடவுட் பணைமுழங்க வென்றிக் கொடியின் மகரங் குமுற - நெடிய  | 154 | 
அலகி லசோக நிழற்ற வடைய உலகில் மதுகரமூதக் - கலகித்  | 155 | 
தலங்க லடவிக் குயிற்குல மார்ப்ப விலங்கன் மலயக்கால் வீசக் - கலந்தெழும்  | 156 | 
ஆவி யகிலொடு நீரோ டரமகளிர் தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் - காவில்  | 157 | 
விடவிட வந்துயிர் மீதடுத்துப் போன வடிவும் பழம்படியே வாய்ப்பக் - கொடியிடை  | 158 | 
எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும் புண்ணியம் போலப் பொழில்புகுந்தான் - அண்ணல்  | 159 | 
சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த வரம்போல் வளமறுகில் வந்தான் - வரும்போதில்  | 160 | 
ஏன்று மதன னியமியம்ப வேயனகன் மூன்று முரசு முழங்கின - தோன்றாத  | 161 | 
வாரிக் களிறு முழங்கவே மானதன் மூரிக் களிறு முழங்கியது - வேரித்தார்  | 162 | 
கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து நிற்குங் கவிகை நிழற்றியது - முற்கொண்டு  | 163 | 
மற்றை யலகின் மதுகர மூதவே ஒற்றை வலம்புரி யூதியது - முற்றாத  | 164 | 
சொற்குதலைக் கோகுலங்க ளார்க்கவே சோளேசன் அற்கமணிக் காகளங்க ளார்த்தன - தெற்கெழுந்த  | 165 | 
மல்லன் மலயக்கால் வீசவே மானதன் மெல்லென் கவரிக்கால் வீசியது - மெல்லியலும்  | 166 | 
காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே கோமைந்தன் வேழங் குறிகினாள் - கோமனும்  | 167 | 
மல்கு மூவகைக் கலுமி வரவரப் பில்கு மதர்வைப் பெரும்பரப் - பல்குலும்  | 168 | 
கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறைநிரம்ப மங்கைப் பருவத்தை வாங்கினாள் - மங்கை  | 169 | 
திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வேள் வெருக்கொள்ளுஞ் செவ்வி விளைத்தாள் - பெருக்க  | 170 | 
ஒருவ ரொருவர்க் குருகி யுருகி இருவரு மீடழிய நோக்கி - வருகாமன்  | 171 | 
செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண் மஞ்சாய கோல மணாளனையும் - அஞ்சாதே  | 172 | 
கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோத் தெய்யுந் தரமே யெழப்போனான் - தையல்  | 173 | 
மங்கை  | |
ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பித் திருத்தி யனைய வெயிற்றாள் - கருத்தின்  | 174 | 
நிலையிற் சிறந்த நிகரிலா மேரு மலையிற் பிறந்த வயிரம் - அலையிற  | 175 | 
பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல முழக்கக் கருவுயிர்த்த முத்தம் - தொழத்தகும்  | 176 | 
முன்னை யுலக முழுதுந் தருமுரசு மன்ன னபிடேக மாணிக்கம் - முன்னவன்  | 177 | 
பாற்கட னீங்குநா ணீங்கப் பழம்படியே நாற்கட னாயகனை நண்ணுவாள் - மேற்கவின  | 178 | 
பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும் கொண்ட துணைவியருங் கூசுவாள் - புண்டரிகத்  | 179 | 
தாடும் பொழுதினு மன்னப் பெடையயிர்ப்பப் பாடு மழலைப் பரிபுரத்தாள்- நீடிய  | 180 | 
தூசுகள் வெள்ளென்று தூயன சேயன கோசிக மாக்குங் குறங்கினாள்- கூசிப்  | 181 | 
பணியு மரசுப் பணிச்சுடிகை யேகோத் தணியு மரைப்பட் டிகையாள் - துணியுங்கால்  | 182 | 
அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்குப் பற்றுண் டெனுமுதர பந்தனந்தாள் - கொற்றவன்  | 183 | 
சங்க நிதிமுத்தத் தாமத்தாள் பத்மநிதி துங்க நவரத்னத் தோள்வளையாள் - புங்கம்  | 184 | 
தொடுக்கு மலரோன் சுறவுக் குறவு கொடுக்கு மகரக் குழையாள் - அடுத்துப்  | 185 | 
பணிதந் தலகில் பராவெடுத்துத் சிந்தா மணிதந்த சூளா மணியாள் - அணியே  | 186 | 
பரவி விறலியரும் பாணருந் தற்சூழந் திரவி புகார்பாடு மெல்லை - வரவரக்  | 187 | 
கொங்கைக்குந் தோளிணைக்கு மாற்றாக் கொடிமருங்குல் நங்கைக்கு வந்தொருத்தி நாயகியே - கங்கைத்  | 188 | 
துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணாட் டிறைவன் றிருப்பவனி யென்றாள் - பிறைநுதலும்  | 189 | 
வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை வானிற் கணிய மயில்போன்றும் - தானே  | 190 | 
வரவே நினையு மனக்களியா லிற்றை இரவே நமக்கிடையூ றென்றாள் - இரவில்  | 191 | 
செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன் வெயிற்கரங்க ளூடாட வேண்டும் - உயிர்க்கொலைசூழ்  | 192 | 
தென்மலயத் தென்றலை யோட்டிப் புலியிருந்த பொன்மலைய வாடாய் புகுதென்னும் - முன்மலைந்த  | 193 | 
கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த பாற்கடல் வாராய் பரந்தென்னும் - மேற்பரந்து  | 194 | 
கார்பாடும் புள்வாய்க் கடுப்பெய் தமுதிறைவன் பேர்பாடும் புள்வாயிற் பெய்கென்னும் - ஈர்குரல்  | 195 | 
அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம் முன்றிற் பனையு மெனமொழியும் - இன்றிரவை  | 196 | 
ஊழிக் குயில்காய்ந் தொருபுலரி கூவிய கோழிக்கே சோலை கொடீரென்னும் - வாழிய  | 197 | 
பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும் வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் - நள்ளிருட்  | 198 | 
கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த மங்கைப் பருவத்து வாணுதலும் - பொங்கொலிநீர்  | 199 | 
வையகங் காவலற்குப் பெய்யு மலர்மழைக்குக் கொய்பொழில் சென்று குறுகினாள் - செய்ய  | 200 | 
கொடுங்குழை மின்னக் குயில்கொழுதக் கோத விடுங்குழை தேமாவின் மின்ன - நெடுங்குழை  | 201 | 
வல்லிக் கொடிய முறுவலிப்ப வந்தெதிர் முல்லைக் கொடியு முறுவலிப்ப - மெல்லியற்  | 202 | 
பாந்தளுந் தோற்கும் பகட்டல்குல் கைம்மலரக் காந்தளு நின்றெதிர் கைம்மலரப் - போந்தார்  | 203 | 
பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த குரவு மரப்பாவை கொள்ளப் -புரிகுழற்  | 204 | 
சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலைப் பாலையின் மான்மதம் பாரிப்பச் - சோலையின்  | 205 | 
வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்பக் கோங்கு மதுவெதிர் கொப்புளிப்ப -ஆங்குத்  | 206 | 
திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம் பருவஞ்செய் சோலை பயப்பப் - பெருவஞ்சி  | 207 | 
கொய்தன கொய்தன யாவும் பலகூறு செய்தனர் செய்தனர் பின்செல்லக் - கொய்யாத  | 208 | 
பொன்மல ராயம் பொழியப் பொழிற்கொண்ட மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் - மன்னனும்  | 209 | 
எப்போதிற் போது மொருபோதி லேந்திழை கைப்போதிற் பெய்தன கண்டருளா - அப்போதே  | 210 | 
செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும் கொங்கை கணங்கெறிந்துங் கொப்பளித்தும் - மங்கை  | 211 | 
பரிசி லுருவம் பயந்தன வென்று குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் - தெரிவரிய  | 212 | 
தூசுந் துகிலுந் தொடியுங் கடிதடஞ்சூழ் காசும் பலகாற் கவர்ந்ததற்குக் -கூசி  | 213 | 
இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ் உலகுங் கொடுப்பானே யொப்பப் - பலகாற்  | 214 | 
கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து விடாது களிறகல விட்டான் - அடாதான்பால்  | 215 | 
மடந்தை  | |
ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும் ஓரடியு நீங்காதா ளோராணங்கு - சீருடைய  | 216 | 
மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து தானு மதிய மெனத்தகுவாள் - பானின்று  | 217 | 
அனலுங் குழைமகர மஞ்சப் புடைபோய்க் கனலுங் கயலனைய கண்ணாள் - மினலால்  | 218 | 
இருளுடைய மேனின் றெறிசுடிகைப் பாப்புச் சுருளுடைய வீங்கிய தோளாள் - அருளொடும்  | 219 | 
தம்புறஞ் சூழ்போதத் தாயரே வீக்கிய வம்பற வீங்கும் வனமுலையாள் - பைம்பொனின்  | 220 | 
பண்ணிறக் காஞ்சியுங் கட்டிய பட்டிகையும் கண்ணிறப் போய கடி தடத்தாள் - தண்ணுறந்தார்  | 221 | 
மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத் தன்மணி மாளிகைத் தாழ்வரையிற் -பொன்னுருவில்  | 222 | 
தைத்துத் துகிரு மரகதமுந் தாறாக வைத்துக் கமுக வளஞ்செய்து - முத்தின்  | 223 | 
பொலன்றோ ரணநிரைத்துப் பொன்னடுத்த மேக தலந்தோய் விசால தலத்து - மலர்ந்தபூங்  | 224 | 
கற்ப தருநிரைக் கற்ப லதைபடர்ந்து பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் - நிற்பப்  | 225 | 
புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி நகைவச்ர மாலையே நாற்றி - பகல்விளங்கா  | 226 | 
மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே எல்விளக்கு மாசு வெதிரெடுத்து - நொல்விய  | 227 | 
பூநறுஞ் கண்ணப் பொடியடங்க வீசிய நான நறுநீர்த் தளிநளிய - மேனிலையிற்  | 228 | 
கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ கொங்கை யினைநீர்க் குடநிரைத்து - எங்கும்  | 229 | 
அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள விசும்பு தவிர வலிக்கிப் - பசும்பொன்யாழ்  | 230 | 
முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப இட்ட தவிசின் மிசையிருந்து -பட்டினஞ்சூழ்  | 231 | 
பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும் கன்னிக்குங் கங்கைக்குங் காவலனைச் - சென்னியை  | 232 | 
தானைப் பெருமானை நல்ல சகோடங்கொண் டியானைப் பெருமானை யேந்தெடுப்பாள் - மேனாள்  | 233 | 
யானையின் பெருமை  | |
உகந்த பிடியுடனே யோரெண் பிடியும் திகந்த களிறெட்டுஞ் சென்று - முகந்து  | 234 | 
துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச் சிறக்கு மபிடேகஞ் செய்து - விறக்கும்  | 235 | 
உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும் அயிரா பதமத யானை - உயரும்  | 236 | 
கடநாக மெட்டுங் கடநாக மெட்டும் படநாக மெட்டும் பரந்தீர்த் - துடனாகத்  | 237 | 
தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும் கன்னாவ தங்கிசமாக் கைக்கொண்டு - பின்னவர்  | 238 | 
வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக் கோளகையா கக்கொண்ட கோக்களிறு - மாளிகை  | 239 | 
தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித் தூக்குண்ட கண்டை தொடருடனே - வீக்குண்டங்  | 240 | 
காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத் தாராகக் கொண்ட மதாசலநீர் - வாரா  | 241 | 
நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும் குதிக்கு மதர்சுவடு கோத்து - மதிக்கும்  | 242 | 
பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும் அடிவிடா தவ்வா றடையப் - படிவிடா  | 243 | 
தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக் கூட்டும் பெருங்கடவுட் கொல்யானை - நாட்டில்  | 244 | 
பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப் பணிகொண்ட பொவம் பரக்க - பணிகொண்ட  | 245 | 
கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர் ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் - சேரர்  | 246 | 
கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண் டினக்கு மரசுவா வெல்லாம் - தனக்குத்  | 247 | 
துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப் பணிக்குங் கடவுட் பசுடு - தணிப்பரிய  | 248 | 
பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின் மாசுங்கை தோயப்போய் மாமேரு - நாகங்கைக்  | 249 | 
கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக் கண்டு களிக்குங் களியானை - வண்டலம்ப  | 250 | 
நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக் குன்று மொளித்துக் குளிப்பமுன் - சென்றழுத்திப்  | 251 | 
பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால் செண்டு வௌிகண்ட செங்கைமாக் - கண்ட  | 252 | 
மதிலே யகழாக வாங்கி யகழே மதிலா வெழாநிற்க வைத்துப் - புதுமலர்செய்  | 253 | 
வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றை வாவிய தாக வெனவகுத்துத் - தாவுமான்  | 254 | 
வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர் வெள்ளிடை யாக வுடன்விதித்துத் - தெள்ளிப்  | 255 | 
புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப் புரப்பாரே யாக்கும் புகர்மாத் - திருக்குலத்துக்  | 256 | 
கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக் கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு  | 257 | 
கடியுங் களிறுங் களிறாமே காதற் பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில்  | 258 | 
மாற்று மருமணம் வங்காள பாகத்து வேற்று மதமா ம்ருகமத்தைப் - போற்றார்  | 259 | 
வயிரா கரமெறிந்த மானதன் கண்டன் அயிரா பதமதமே யாக்கிச் - செயிர்தீர்ந்த  | 260 | 
காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென் றேதப் பெயரு மொருபொருப்புப் - பாதையிற்  | 261 | 
கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற் கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் - விச்சியில்  | 262 | 
வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில் நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் - செல்லூரிற்  | 263 | 
கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில் வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத்  | 264 | 
தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும் பரணி புனைந்த பகடு - சரணென்று  | 265 | 
வாடா மதுரயாழ் வாங்கி மடவரல் பாடா விருந்த பருவத்து - நீடாப்  | 266 | 
பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை குரிசி லுடன்வந்து கூடத் - தெருவில்  | 267 | 
வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன் பொரவந்தான் கைவாங்கிப் போனான் - விரல்கவரும்  | 268 | 
வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும் ஆணைப் பெருமா ளகப்பட - வாணுதல்  | 269 | 
ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை தந்து தொழவெழுந்து சாத்தினாள் - மைந்தனும்  | 270 | 
பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும் கண்ணுக்குந் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும்  | 271 | 
வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும் கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை  | 272 | 
முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும் படியு மரசும் பணித்தான் - பிடியும்  | 273 | 
சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி கவிகையுந் தானுங் கடந்தான் - குவிமுலை  | 274 | 
அரிவை  | |
ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன் சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில்  | 275 | 
விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும் படுசுடர்க் செம்பொற் படியான் - வடிவு  | 276 | 
நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே படிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில்  | 277 | 
குலபதும ராக பதிகுதி கொள்ளும் பலபதும ராகப் படியாள் - அலைகடலில்  | 278 | 
முற்றா மரையாண் முகத்தா மரையாளப் பொற்றா மரையாளப் போதுவாள் - அற்றைநாள்  | 279 | 
நீர் விளையாட்டு  | |
தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம் அண்ணல் வருமளவும் மாடுதுமென் - றெண்ணிப்  | 280 | 
புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத் துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப் - பணைத்துப்  | 281 | 
புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும் நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு  | 282 | 
பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும் அன்னக் குழை மலம்வரப் -பின்னரும்  | 283 | 
காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத் தேற்குந் தரமேநா மென்றுபோய்த் - தோற்கின்ற  | 284 | 
வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும் தாவி விழுந்து தடுமாறத் - தீவிய  | 285 | 
பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும் அம்மென் கழுத்துக்கு மாற்றாது - மம்மர்ப்பட்  | 286 | 
டெங்குத் தரியா திரியல் போ யாமையும் சங்குந் தடத்தை விடத்தவழ - நங்கைதன்  | 287 | 
செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி எவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய  | 288 | 
கொள்ளைக் குமுத மலருங் குழையிள வள்ளைக் கொடியு முடன்மயங்க - வெள்ளம்போல்  | 289 | 
பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங் கையும் புடைப்பக் கலுழ்ந்தனபோல் - தொய்யில்சூழ்  | 290 | 
தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு காமர் தடமுங் கரைகடப்பக் - கோமகன்  | 291 | 
உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டு கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் -வெள்ளம்  | 292 | 
படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன் வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப - நெடிது  | 293 | 
திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித் திளைக்குங் கொடியிடையா ரேத்தித் - திளைத்துமிழ்த்  | 294 | 
தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின் செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே  | 295 | 
மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க் கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய்  | 296 | 
நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள் எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்படக்  | 297 | 
கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகு பண்டுபோ னோக்கப் பயப்படுவார் - கண்டு  | 298 | 
கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற் பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை  | 299 | 
யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த தானைப் பெருமாளைச் சந்தித்தாள் - மேனி  | 300 | 
பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத் திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொருவிற்கை  | 301 | 
வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத்  | 302 | 
தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற் றொடுக்கு மகரம்போற் றோற்ற - வடுத்தெய்யும்  | 303 | 
மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண் தென்றறேர் தானனங்கன் செற்றதென - மென்றோளி  | 304 | 
பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூ வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் - தாங்கி  | 305 | 
ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை கொடுப்ப விறையவனுங் கொண்டான் - கொடுத்தவற்றுட்  | 306 | 
பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை நன்மாலை சாத்தினா னாயகனும் - தன்மார்பில்  | 307 | 
ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே  | 308 | 
அரிவையின் முறையீடு  | |
மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள் கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட  | 309 | 
முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம் கொற்றத் தனிவிற் குனியாதோ - நற்றடத்துள்  | 310 | 
ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர வேறு முறிய வெறியாதோ- மாறாது  | 311 | 
காந்து முழுமதியை யோரோர் கலையாக ஏந்து சுடர்வடியா ளீராதோ - பாந்தண்மேல்  | 312 | 
வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய் உய்ய வொருகுரல்வந் தூதாதோ - வையம்  | 313 | 
தணியுந் தகைத்தோ தமியன்மா லென்று பணியு மடக்கொடியைப் பாரா - வணிய  | 314 | 
உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பா வருத்தந் திருமனத்து வைத்தே - திருந்தடந்  | 315 | 
தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில் நாளும் பிரியாமை நல்கினான் - மீள  | 316 | 
ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம் திருமகன் போலத் திளைப்பான் - இருநிலம்  | 317 | 
தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித் தோளா லளந்த துணைமுலையா - ணாளும்  | 318 | 
திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு வரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில்  | 319 | 
விருப்பவனி கூர வருகின்ற மீளி திருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப  | 320 | 
அணந்த பணிவலைய வண்ணன் முதனாண் மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் - கொணர்ந்தணிந்த  | 321 | 
சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும் கோட மணிமகர குண்டலமும் - ஆடிய  | 322 | 
சச்சையு மாலையு மாரமுந் தாமமுங் கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற  | 323 | 
பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும் கட்டுங் கனவயிரக் காறையும் - இட்ட  | 324 | 
திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா உலகமுந் தோற்கு முருவும் - கலகமும்  | 325 | 
மாரனுந் தானும் வருவாளை மன்னரில் வீரனுங் காணா வெருவராப் - பாரனைத்தும்  | 326 | 
தேறுந் திருவைத் திருவவ தாரங்கள் தோறும் பிரியாத் தொடர்பாலும் - ஏறுங்கண்  | 327 | 
வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத் தோளாலு மீளத் துவக்குண்டு - நீளிய  | 328 | 
மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை கைவிடா வார்வங் கடைப்பிடித்துத் - தெய்வப்  | 329 | 
புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம் அவனி முழுது மளித்தான்போற் - கவினிய  | 330 | 
அற்புத மாலை யணியப் பணிசெய்யுங் கற்பக மொன்று கடைக்கணித்தான் - பொற்படிக்குப்  | 331 | 
பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் - ஓதி  | 332 | 
முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின் படிக்குச சலாபம் பணித்தான் - வடிப்பலகை  | 333 | 
அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வட வச்சிரா கரமே வழங்கினான் - பச்சை  | 334 | 
மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப் பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில்  | 335 | 
பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள் விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர்  | 336 | 
வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும் பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்குப்  | 337 | 
பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும் ஆடிக் குடக்கூத்து மாடினார் - பாடியில்  | 338 | 
ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற் கோநிரையு மீளக் குழாங்கொண்டு - மீளிரையின்  | 339 | 
மீதும் புடையு மிடைய விழவெழவேய் ஊதுந் திருப்பவள முட்கொண்டு - சீதக்  | 340 | 
கடந்தூர வந்தக ககன தளமும் இடந்தூர வந்து மிணையக் - குடங்கள்  | 341 | 
எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள் விழவிழ மேன்மேல் விழுந்தும் - பழகிய  | 342 | 
தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும் தோளிரண்டு மென்றென்று சொல்லியும் - கோளொளிய  | 343 | 
நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற் பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் - முன்னே  | 344 | 
தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற் பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய்  | 345 | 
நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த ஆடகப் பாம்பொன் றருளினாள் -பாடுநர்மேல்  | 346 | 
வற்றாத மானத வாவியல் வாடாத பொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன்  | 347 | 
கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத  | 348 | 
பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர ஏறுந் தவிசுதர வேறினாள் - வேறொருத்தி  | 349 | 
பேரிளம் பெண்  | |
கச்சை முனியுங் கனதனமுங் குங்குமச் சச்சை கமழுந் தடந்தோளு -நிச்சமுரு  | 350 | 
ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும் போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர்  | 351 | 
பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி அணியுந் திருத்தா ளபயன் - பணிவலய  | 352 | 
வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத் தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்-பூக்கமழும்  | 353 | 
ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம் பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற்  | 354 | 
றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற் கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி  | 355 | 
தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளி பொங்கு நுரையினும் போய்ப்புகா - தங்கு  | 356 | 
நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும் இறவு கடைக்கணித் தெய்தச் - சுறவுக்  | 357 | 
கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை நெடியோனை நேமிப் பிரானைப்-படியோனைக்  | 358 | 
கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக் கொண்டனை யென்று குறுகுவாள் - கண்டு  | 359 | 
மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத் திலகங் குறுவியராற் றேம்பப் - பலகுதலை  | 360 | 
மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள தேற்றம்பித் தேற்றஞ் சிதைவிப்ப- ஏற்று  | 361 | 
துகிலசைந்து நாணுந் தொலைய வளக முகிலசைந்து நோவிடைக்கு முற்ற - அகிலமும்  | 362 | 
சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும் யானையு நிற்க வெதிர்நின்று - கோனே  | 363 | 
சதயுக மேனுந் தரணிபர் மக்கள் பதயுக மல்லது பாரார் - உதயாதி  | 364 | 
காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத் தேந்து மரவர சென்றிகவாள் -பூந்தொடி  | 365 | 
நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய வெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் - பொற்பிற்  | 366 | 
கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென் பொலந்தா மரையென்று போகாள் - நிலந்தாரா  | 367 | 
அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டு செந்தா மரையென்று செம்மாக்கும் - முந்துற்ற  | 368 | 
மல்லா புரேச சிலகால மற்றிவை எல்லாந் தனித்துடையோம் யாமன்றே - அல்லாது  | 369 | 
மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மாகத்துக்  | 370 | 
காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்த வேலை வெயிலெறிக்க வேண்டுமோ - மாலைச்  | 371 | 
சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால் நிலாவட்ட நின்றெறிக்க நேரோ - குலாவலைஞர்  | 372 | 
சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால் ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே - கோற்றொடியார்  | 373 | 
நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால் தாங்கரிய வேட்கை தவிப்பாரே - யாங்களே  | 374 | 
தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும் உண்மை யறியா வுணர்வினேம் - வெண்மையினிற்  | 375 | 
செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம் பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் - நில்லாத  | 376 | 
வாமே கலையே முலைவீக்கா வம்பினேம் யாமேயோ விப்போ தௌிவந்தேம் - யாமுடைய  | 377 | 
நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத் தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னவநீ  | 378 | 
முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல்  | 379 | 
இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ தமைக்குந் துகிலினை யன்றே - அமைத்ததோர்  | 380 | 
பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது கார்க்கடற் சென்று கவர்சங்கே-சீர்க்கின்ற  | 381 | 
தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம் கண்ணியின் றாரின் கவட்டிலையே - தண்ணென்ற  | 382 | 
பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர் பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய  | 383 | 
முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக் கொத்துக் குடையொக்கக் கூடுமே - இததிறத்தால்  | 384 | 
எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும் அண்ணற் கிகழ வடுக்குமே - விண்ணப்பம்  | 385 | 
கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற் றண்டரளக் கொற்றத் தனிக்குடையோன் -பண்டறியா  | 386 | 
ஆரமு மாலையும் நாணு மருங்கலா பாரமு மேகலையும் பல்வளையு - மூவரும்  | 387 | 
பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும் படியுங் கடாரம் பலவும் - நெடியோன்  | 388 | 
கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த  | 389 | 
பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக மாதர் மனங்கொள்ளா மால்கொள்ளச் -சோதி  | 390 | 
இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ் உலகுடையான் போந்த னுலா.  | 391 | 
வெண்பா  | |
அன்று தொழுத வரியை துளவணிவ தென்று துயில்பெறுவ தெக்காலம் - தென்றிசையில் நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த வீரதரா வீரோ தயா.  | |
---------------------------------------------
No comments:
Post a Comment