தென்தமிழகத்தில் உடையார் வழிபாடு


நாட்டுப்புறவியல் ஆய்வாளர் மன்றம்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் 613005

கருத்தரங்கக் கட்டுரை 15-12-1999

ஆறுமுகனேரி த.த.தவசிமுத்து

 

               தென்தமிழகத்தில் உடையார் வழிபாடு

முன்னுரை

     சங்ககாலத்திற்கு முன்பிருந்து நமது தமிழகத்தில் வீரர்கள் போற்றப்பட்டனர். இன்று நமது முற்காலப் பண்பாட்டினை அறிய உதவுவது வீரர்கள் குறித்து எழுந்துள்ள இலக்கியங்களே செவ்வியல் இலக்கியமானாலும் நாட்டுப்புற இலக்கியமானாலும் அதன் கதைத் தலைவனாக ஒரு வீரனே இருப்பான். அவர்களது சமாதி கல்லறை மற்றும் நினைவுப்படுத்தி வழிபடும் இடங்களில் உயரமான நினைவுச் சின்னங்களையோ நிறுவுவர். இறந்தவர்களுடைய பதவி செல்வாக்கு செல்வம் இவற்றின் அடிப்படையில் இத்தகைய அடையாளச் சின்னங்களின் அளவும் வேலைப்பாடும் மிகுந்திருக்கும். 

     போரினால் விழுப்புண்பட்டும்மானங்கருதி தற்கொலையினால் சிதைந்தும் போனவீரர்களின் உடலை சிதையூட்டி விட்டு ,நினைவு சின்னங்களை சிறிய பீடங்கள், நடுகற்கள் கல்தூண்கள் ஆகியவற்றை அமைத்தனர்.தீப்பாய்ந்த பெண்களுக்குச் சதிகற்களையும் அமைத்தனர்.அவற்றினை ஆண்டுதோறும் வழிபட்டு வருவர்.

     இவ்வழக்கத்தின் வெளிப்பாடுகள் ஆஆநாட்டுப்புறக் கதைப்பாடல் ,நினைவு பீடங்கள் தூண்கள் தென் தமிழக நாட்டுப்புற மக்களின் வழக்காறியலில் காணப்படுகின்றன.திருச்செந்தூர் வட்டத்தில் உடையார் குலதெய்வவழிபாட்டிலும் அய்யனார் வழிபாட்டிலும் இவற்றினை இனம் காணமுடிகிறது.இவற்றினை கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நினைவுக்கல்தூண்

    வீரர்கள் , அரசக்குடும்பத்தினர், செல்வாக்கு மிகுந்தோர் ஆகியோரின் கல்லறை மற்றும் நினைவு இடங்களில் 20 அடி 25 அடி உயாயரதிற்குக் கல்தூண்களை நடுவர் .[1]

    சுமார் 6அடி 7 அடி உயரத்திற்கு நடுகற்களையும், கணவனை இழந்த பெண்கள் தீப்பாய்ந்து இறந்தவுடன் ,’’தீப்பாஞ்சாம்மனாக்கி சதி கற்களையும் ஆண்டுதோறும் புனிதநீராட்டி,பூமாலையிட்டு, பொங்கலிட்டு வழிபடுவர்.

 வடக்கிருந்து உயிர் நீத்தவர்களுக்கும் நினைவிடம் நினைவுக்கல் அமைப்பதுண்டு.[2]

  அய்யனார் கோயில்களில் நடுகற்களும் நடுமரங்களும்

     திருச்செந்தூர் வட்டத்தில் [கொற்கை வளநாட்டில்] அய்யனார் கோயில்கள் நிறைந்துள்ளன.[3] வாழ்ந்துமறைந்த வீரர்களும் குலதெய்வமாகவும் பொதுவான அய்யனார் என்ற பெயரில் வழிபடப் பெறுகின்றனர்.

   1. பூலுடையார் அய்யன்[4]  2.ஆயிரங்காவு அய்யன் 3.அய்யன் படைப்போர் 4. சடகோபால் அய்யன் 5.பொன்னும்பெருமாள் 6.அய்யன் பச்சைப்பெருமாள் 7.அருஞ்சுனை அய்யன் 8.கருக்குவேல் அய்யன் 9.இளம்பாளை அய்யன் 10.வணங்காமுடி அய்யன் 11.குன்னிமலை அய்யன் 12. தூத்துவால் அய்யன் 13.மானாடு அய்யன் 14.தலையூனி அய்யன் 15.பொன்வண்டு அய்யன் 16.பலவேசமுத்து அய்யன் 17.மருதமலை அய்யன் 18.அல்லியூத்து அய்யன்  19.குட்டிச்சாத்தான் அய்யன் 20.தூசிமுத்து அய்யன் 21.கோட்டைவாழய்யன் 22.இல்லங்குடி அய்யன் 23.தலைகாணி அய்யன் என்று ஆங்கெங்கே தனித்தனியாகவும் முதன்மையாக வழிபாடு ஏற்றுவரும் அய்யனார் தெய்வத்துடன்  21 சிறு தெய்வங்களின் பீடங்கள் கூட்டமைப்பாக இருக்கும்.[5] அவை வருமாறு.,

1.தவசுத்தம்பிறான் 2.பத்திரகாளி 3.பரமராக்கித்தி 4.சிவனிணஞ்சபெருமாள் 5.தளவாய் 6.சுடலைமாடன் 7.காத்தவராயன் 8.வன்னியராயன் 9.பாவாடைராயன் 10பட்டவராயன் 11.பெரியதம்பி 12.சின்னதம்பி 13.கருப்பன் 14.முன்னடியான் 15.பின்னடியான் 16.முண்டன் 17.பேச்சியம்மன் 18.இசக்கியம்மன் 19.பலவேசக்காரன் 20.முனீசுவரன் 21.சங்கிலிமாடன்

சில பெயர்கள் மாறுதல்களுடன் அமையும்.அய்யனார் தெய்வம் மற்றும் கூட்டமைப்புச் சிறுச்தெய்வங்களுக்குச் சிலைகள் பெரியதாகப் பூஜைக்குரிய பீடங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும்.இன்வை தவிர ,ஏராளமான சிறு சிலைகள் கல், மரம்,ஆகியவற்றில் செய்யப்பட்டவை மணலில் வரிசையாகப் பீடமின்றி நட்டு வைக்கப்பட்டிருக்கும்.இவை இறந்த தலைவர்களுக்குரிய நடுகல் வழிபாட்டிற்குரியது என்று கருத இயலும்.’’கொடைவிழா’’வின்போது  தெய்வக் கதைபாடல் வில்லிசை பாடப்படும்.

      தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதிகளுள் ஒன்றான  தென்திருப்பேரை அருகில் உள்ள ஆயிரங்காவு அய்யன் கோயிலில் 500 ஆண்டுகளுக்கு முன்னதாகச் செய்யப்பட்ட மரச்சிலைகள் நடுகற்கள் போல மணில் நட்டு வைக்கப்பட்டுள்ளன. 

கற்பரண்கள்

       தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் தாலுகா,பள்ளிப்பத்து கிராமம்.குடியிருப்பு விளையில் உடையார் சுவாமி கோயில் உள்ளது. [6]. இங்கு உடையார் சுவாமிக்கும் தென்காசியை அரசாண்ட  ஸ்ரீவல்லபமாற பாண்டிய நாடானுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் வழிபாடு நாட்டுப்புற வழக்கப்படி நடைபெறுகிறது.

    தென்காசி அரசனிடம் பணிபுரிந்த வீரனான உடையார் மீது பொய்யான களவுப் பழியை சுமத்தி ஒழித்து விரும்பிய அரச குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளின் சூழ்ச்சியால் களவுப்பட்டம் சூட்டப்பட்டார். மனமுடைந்த உடையார் ‘’ இனி உயிர் வாழ்வதில்லை ‘’ என உறுதி கொண்டு இரும்பில் கழுமரம் அடித்து , அதைத் தானே சுமந்துசென்று தென்காசியில் ஊருக்கு வடபுறம் உள்ள கழுவன் திரட்டில் நிறுத்தி கழுவேறி உயிரிழந்தார். கி.பி.16 ஆம் நூற்றாண்டில் நடந்ததாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியின் தாக்கத்தால் இத்தெய்வ வழிபாடு அச்சமும் பக்தியும் மேலிட இன்றுவரை நடைபெற்று வருகிறது.

       இவாலயத்தில் உடையார் சுவாமியை நினத்து சுமார் 20 அடி உயரமுள்ள நான்கு கருங்கல் தூண்களைச் சதுர அமைப்பில் நட்டு அதனை மரத்துண்டுகளால் ஏணி போல இணைத்துள்ளனர். இது கற்பரண் எனப்படும்.   

        தென்காசி அரசனுக்கும் கற்பரண் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய தெய்வங்களுக்குச் சிலைகளும் பீடங்களும் அமைக்கப்பட்டுள்ள. சதுர வடிவில் கோபுரத்தின் [skeleton] எலும்புக்கூடு போல காட்சியளிக்கும்.இதன் உச்சிப்பகுதி அழகாக கூர்மையான கும்பக்கலசம் போன்று மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் தாக்கம் தெரிகிறது. 

        இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் நடைபெறும். கோயில் விழாவிற்கு முன்னதாக இக்கற்பரணைச் சுத்தம் செய்து ,வர்ணம் அடித்துப் புதுப்பிப்பர். திருவிழாவன்று வாழை மடல்களில் அலங்காரமாக ஒளிரும் வர்ணத்தாள் மற்றும் பூக்களைகட்டி வரிசையாக அடுக்கி, பரணின் முழுஉயரமளவிற்குத் தொங்க விடுவர் .இத்தெய்வத்திற்கு நேர்ச்சையாகப் படைக்கப்படுகிறது. 8 முழ மல் வேட்டியினைப் பரணைச் சுற்றிக்கட்டுவர். நீண்ட அழகிய உடை வாள் பரணில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.[7] உடையார் தெய்வ அருள் வரப்பெற்ற சாமியாடி கற்பரண் முன்பாக நின்று ஆடுவார்.  

கழுமரம்

   கற்பரணுக்கு வலதுபுறம் கழுவேறி மாண்டதன் நினைவாக சுமார் 6 அடி உயர இரும்பு கழுமரம் நட்டு வைக்கப்பட்டுள்ளது.திருவிழாவின் போது கழுமரத்தின் மேலே மல்லிகைப் பூப்பந்தலிட்டு கழுவடியைச் சுற்றிலும் பூவினைப் பரத்தி வைக்கின்றனர்.

கதைப்பாடல்

   அவச்சுவைமிக்க இத்தெய்வக் கதைப்பாடல், இத்தெய்வத்தை வழிபடும்  ’’வில் பாடும்பாட்டாளியார்’’ எனப்படும் புலவர்களால் பாடப்படுகின்றது. ஏட்டுச் சுவடியை முன்வைத்து பார்த்து ஒரு பாடல் வரி கூடமாறாமல் பயபக்தியுடன் படிக்கின்றனர். தமிழர் கலையான ’’ கூத்தும் பாட்டும்’’ இரவில் நடப்பது போல, திருவிழாவில் இக்கதைப்பாடல், இரவில் பாடும் பொழுது பாடும் பொருளுக்கேற்ப நடந்து முடிந்த சம்பவங்களை நினைவுப்படுத்துவதாக அமையும், அருள் வரப்பெற்ற ‘’சாமியாடி’’ பாவனையுடன் ஆடி உடையார் காலச்சூலை உருவாக்குவார்.

      வலயப்பணிக்கனுடன் யுத்தம் செய்ய உடையார் வாளெடுத்து

    ’’ பரிசை தொந்தோமெனவே வைத்தார்

     தொங்குந் தொகுதியென்ன சூழ்ந்தகளனி தன்னில்

     யெளுதரியவே பரிசை யெங்கு மதிரவைத்து ‘’ [வரி 3335] என்ற

 

பாடல் வரி வந்தவுடன் ’’சாமியாடி’’ உடையார் கற்பரணிலிருக்கும்

உடைவாளை உரையிலிருந்து உருவியெடுத்து குதித்து வாளைச்சுழற்றி

ஆடுவார்.

      ‘’ …….வெட்டியே உடையார் வென்றவரும் நிற்க’’ 3393

என்ற பாடல் வரி வந்தவுடன் அமைதியாகி வாளைப் பரணில் சாய்த்து

நிறுத்துவார்.

கழுவேற்றக் காட்சி

     ‘’எடுத்தக்களு தோளில் வைத்து இராசன் வாசலிலே

     அடுத்திருந்த மந்திரிமார் அல்லோருந்தான் காண

     அடித்த களுச் சுமந்துடையார் மன்னவனைத் தொழுது நின்றார்’’

என்றுப்பாடல் வரும் போது ’’சாமியாடி’’ கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் 6

அடி உயர இரும்புக் கழுமரத்தினைத் தனது தோளில் வைத்துக்கொண்டு வில்

பாடுவோருக்கும் கழுமரம் நடுமிடத்திற்குமிடையே முன்னும் பின்னும்

வேகமாக ஆடிவருவார்.

 மன்னன் சீவல்லபன் உடையார் மீதுள்ள நம்பிக்கையாலும் அன்பாலும் தடுக்கின்றனர். மறுத்த உடையாரிடம் ,

          ‘’ ……..யாதுனக்கு வேணுமென்றார் ’’ [வரி 3677]

உடையாரும்,

        ’’உன்னைச்சேவித்த படையும் உத்த பரிகாலாளும்

        உத்தமுரசு டம்மானம் மத்துள்ள படையனத்தனையும்

        என்னைச் சேவிக்க அருளும்……….’’ [வரி 3677]

என்று கூறுகின்றார்.

       இப்பாடல் வரிக்கிணங்கப் பலதலைமுறைகளாக ஒற்றை முரசே

குடியிருப்புவிளைக் கோயிலில் அடிக்கப்படுகிறது. வேறு எந்த ராஜமேளமோ,

நாதசுவரமோ வாசிப்பது கிடையாது என்று கூறப்படுகிறது.

 உடையார் கழுவைத் தொளில் வைத்து வரும் போது அவர் வேண்டியபடி

அரசு மரியாதை வழங்கப்படுகிறது.

       ‘’சந்தனம் புணுகுடனே தான் தொளிப்பாருடையார்க்கு ‘’ [வரி 3744]

       ’’மிக்கசந்தனம் புணுகு வீரமார்பில் கோலஞ்செய்வார்’’ [வரி 4077]

என்று பாடும் போது மக்கள் சாமியாடிக்குச் சந்தனம் சவ்வாது பூசி

மாலை அணிவித்து வணங்கி நிற்கின்றனர்.

     ’’பால் பழமுஞ் சற்க்கரையும் பட்டணத்திலுள்ள பேர்கள்

     பக்தியுடன் கொண்டுவந்து உடையார்க்கு தான் கொடுப்பார்’’ [வரி 4058]

என்ற பாடல் வரி வந்தவுடன் ’’சாமியாடிக்கு’’ப் பால் பழம்  கொடுக்கின்றனர்.

கழுகன் திரடு வந்து கழுமரத்தை நிறுத்திய பின்பு,

      ’’நின்ற நிலைதனில்க் குதித்து ஆகாசம் தனிலெழும்பி

       வென்றியுடனே களுவில் சமயமிருந்துடையார்’’

என்று பாடும்போது ’’சாமியாடி’’ உடையார் எனப் பாவித்து நேர்ச்சை செய்து

விடப்பட்டிருக்கும் சேவலைக் கழுவில் ஏற்றுவார்.

     கொடைவிழாவின் உச்சக்கட்டம் கழுவேற்றமாகும். உடையார்           

கழுவேற்றம் நிகழ்ந்தவுடன் அவரது மெய்க்காப்பாளன் தம்பி சின்ன

உடையார் வாளில்  வீழ்ந்து உயிரை விடுவதனை,[8]

      ’’ஊன்றிட்ட வாளதிலே உறப்பாகச் சாடிடவே

      உல்லாசச் செறுக்கனுமோ உடனே மடிந்திடவே’’ [வரி 4150]

என்று பாடியதும் சின்ன உடையார் கற்பரணுக்கருகே அமைந்துள்ள பீடத்தில்

சாய்த்து வைத்திருக்கும் உடைவாளில் வாழைப்பழம் ஒன்றினைக்

குத்தி வைப்பார்கள். இரவுக் கொடைவிழா இத்துடன் நிறைவுபெறுகிறது.

       மறுநாள் பகலில் இத்தெய்வங்களுக்கு ஆட்டுக்கிடாய்களைக் குத்தி

பலியிடுகின்றனர். கொடைவிழாவன்று ஒரு பெரிய பானையில் பொங்கலிட்டு

அதனை ஸ்ரீவல்லப மாறபாண்டியனுக்குப் படையலிட்டு, வழிபடும் மக்கள்

அனைவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். இவர்கள் யாவரும் ஸ்ரீவல்லபமாறன்

குடும்பத்தினர் என்பதை ‘’ ஒருபானைப் பொங்கல் ‘’ காட்டுகிறது.

உடையார் கழுவேறி ஏழு தினங்கள் உயிரோடு இருந்தது போல,

கழுவிலேற்றப்படும் சேவலும் 7 தினங்கள் வரை உயிரோடு இருந்தன என்று

கூறுகின்றனர்.

   ஆறாவது நாள் கழுவிலிருந்து உடையார் தாகம் தீர இடையர் குலப்பெண்

மோர் கொடுத்ததைக் கதைப்பாடல் கூறுவது போல, கொடை முடிந்த

ஆறாவது , நாள் சேவலைக் கழுவேற்றிய கழுவடிக்கு இடையர்

குடும்பமொன்று மோரை ஊற்றி வருகின்றது என்று கூறுகின்றனர்..

ஏட்டுச் சுவடிகள்

    கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளாளன்விளை உடையார் கோயில்

ஏட்டுச்சுவடியின் கதைப்பாடல் 1980 இல் டாக்டர் தி.நடராசன் அவர்களைப்

பதிப்பாசிரியராகக் கொண்டு நூலாக வெளிவந்துள்ளது.

இக்கதைப் பாடலின் தொடக்கம் ,

   ‘’புவி மாதும் போர்மாதும் நான்மாதும்

    நன்மாது சிறந்தோங்கும்…………….’’ [வரி 25]

என்று பிற்காலப் பாண்டியர் சோழரின் மெய்க்கீர்த்தி போலத் தொடங்குகிறது.

    திருநெல்வேலி மாவட்டம் கள்ளிக்குளம் ,ஆ.திருமலாபுரம் உடையார்

கோயில் ஏட்டுச் சுவடியின் கதைப்பாடல் பிரதி இக்கட்டுரையாளரிடம்

உள்ளது. இக்கதைப்பாடலின் தொடக்கம்,

      ‘’பூமாதிரு புயன் உமையானினக்கே……..’’ [வரி 13]

      என்று பிற்காலப் பாண்டியர் சோழரின் மெய்க்கீர்த்தி போலத்

தொடங்குகிறது. [9]

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குடியிருப்புவிளை உடையார்

கோயில் ஏட்டுச்சுவடி ராணிமகராஜபுரம் புலவர் குடும்பத்தாரிடம் உள்ளது.

‘’ உடையார் கதைப்பாடலும் கோயிலும் ‘’ வேரெங்குமில்லை என்று

கூறுமிவர்கள், கொடைவிழாவிற்குச் சுவடியை கொண்டுவந்து உடையார்

கற்பரணில் வைத்துவிடுகின்றனர். ஆய்வுக்கு ஏட்டுச் சுவடியைத் தர

மறுக்கின்றனர். இவர்கள் பல தலைமுறைகளாக ஏட்டுச் சுவடிகளைப்

படியெடுத்து வந்துள்ளனர்.

முடிவுரை

 சங்ககாலத்திலிருந்து தொடரும் நடுகல் வழக்கம் திருச்செந்தூர் வட்டத்தில்

அய்யனார் கோயில்களில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. வித்தியாசமாக

 ‘’ மரங்கள்’’ நடப்பட்டுள்ளது. மேலும் உயரமான கல்தூண்களை மறைந்தவர்

நினைவாகக் கல்லறைகளிலும் ஊர்ப் பொதுவிடங்களிலும் வைத்து வழிபட்டு

வந்த வழக்காற்றினை உடையார் தெய்வ வழிபாட்டில் கற்பரணில்

காணமுடிகிறது.உடையார் கதைப்பாடலுக்கேற்ப நடைபெறும் ‘’

’’ நடித்துக்காட்டும் சாமியாடல்’’ 400 ஆண்டுகளுக்கு முந்தைய

நிகழ்ச்சிகளுக்கு மீட்டுருவாக்கம் கொடுத்து அவலத்தை மக்கள் நெஞ்சில்

நிலை நிறுத்திவைத்துள்ளது.

அடிக்குறிப்புகள்

1] பெரியார் மாவட்டம், பெருந்துறை வட்டம்,கொடுமணல் மெகலித்திக்

பரியல் ஏரியாவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்தூண்கள்,

கற்பலகைகள்

2] விசயமங்கலம் அருள்மிகு சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோயிலில் கி.பி.9

நூற்றாண்டில் வாழ்ந்த பென்ண் துறவிக்கு அமைக்கப்பட்ட புலியப்ப நிசிகைக்

கல் உள்ளது.

3] திருச்செந்தூர் வட்டத்தில் அதிகமாக நாடார் சமுதாய மக்களுக்குக்

குலதெய்வமாகவும், பிறசமுதாய மக்களுக்கும் பொதுவான தெய்வமாகக்

குறைந்த அளவிலும் அய்யனார் கோயில்கள் உள்ளன.

4] உடையார் வழிபட்டு வந்த தெய்வம் பூலுடையார் அய்யன்.

5] உடையார் கோயிலிலும் இத்தகையக் கூட்டமைப்பு உள்ளது.

6] தென் தமிழகத்தில் உள்ள உடையார் சாமி கோயில்கள் வருமாறு,

1] பள்ளிப்பத்து கிராமம் – குடியிருப்புவிளை- திருச்செந்தூர் வட்டம்-தூத்துக்குடி

மாவட்டம்

2] பிச்சிவிளை[சீர்காட்சி அருகே உள்ளது] திருச்செந்தூர் வட்டம்-தூத்துக்குடி

மாவட்டம்

3] எள்ளுவிளை- திருச்செந்தூர் வட்டம்-தூத்துக்குடி மாவட்டம்

4] மற்றும் 5] ஆ.திருமலாபுரம்- டி.கள்ளிக்குளம்- திருநெல்வேலி மாவட்டம்.

6] பரமன்விளை [திசையன்விளை அருகே உள்ளது]

7] வெள்ளாரன்விளை- கன்னியாகுமரி மாவட்டம்.

8] தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோயில் வடபுரம் அமைந்துள்ள

கல்தூண் கழுவடி –ஆ.திருமலாபுரம் பக்தர்கள் வழிபட்டுச் செல்லுமிடம்.

9] மேலவரகுணராமபுரம்-இராசபாளையம் வட்டம்-விருதுநகர் மாவட்டம்-                         

100 சதவீதம் நாடார்களுக்குச் சொந்தமாகவும், குலதெய்வமாகவும்

உடையார்சாமி உள்ளார்

7] நடுகற்களருகில் வீரனுடைய போர் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும்

என்பதை அகநானூற்றுப் பாடலிலே மருதனிளநாகனார் கூறுவதாவது,

  ‘’பெயரும் பீடுமெழுதி அதர்தோறும்

  பீலிசூட்டிய பிறங்கு நிலைநடுகல்

  வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்

  வெருவரு தகுந கானம்..’’

8] தன் மன்னன் இறந்தமை பொறாது அவனது சேவகன் அக்களத்திலே தனது

உயிரை விடுவது ‘’ தன்னை வேட்டல் ‘’ என்று புறப்பொருள் வெண்பாமாலை

கூறும்.

9] தொல்பொருள் ஆய்வாளர் முனைவர் சு.இராஜகோபால்,சென்னை

நேர்முகப்பேட்டி நாள்;20-07-97[ஈரோடு, தமிழகத் தொல்லியல் கழகத்தின் 8 வது

கருத்தரங்கின் போது]


No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு