கணியான் கூத்து
#கணியான் ஆட்டம்
#மகுட கச்சேரி
#மகுட ஆட்டம்
கணியான் கூத்து 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தென் மாவட்டங்களில் இன்றும் கோவில் கொடை விழாக்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக கணியான் கூத்து விளங்குகிறது. இது ஓர் தெய்வீகக் கலையாகும் .இக்கலையை மகுடக்கச்சேரி, மகுட ஆட்டம், கணியான் ஆட்டம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சிவபெருமானோ ரம்பை, ஊர்வசியை அழைத்து வேள்விக் குண்டத்தின் முன் நடனமாட பணித்தார். அவர்கள் ஆடியபொழுது கால் சிலம்புகளின் பரல்கள் ஒன்றோடு ஒன்று உரசி சிவபெருமான் காலடியில் விழுந்தன. அவற்றில் இருந்து இரு கணியான்கள் பிறந்தனர். அவர்கள் இருவருக்கும் கணியான் ஆட்டத்தின் இலக்கண முறைகளைப் போதித்தார் இறைவனாகி சிவபொருமாள் தன் தலையில் உள்ள மகுடத்தை (மணிமுடி) எடுத்து இரு தோல் இசை மகுட வாத்தியங்களாக மாற்றி ஆளுக்கொன்றாகக் கொடுத்து சுடலைமாடனுடன் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது கணியான் கூத்து தொடர்பான புராணக் கூறுகிறது. இறைவன் படைத்தளித்த மகுடத்தை இசைத்துக் கொண்டே ஆடும் ஆட்டம் என்பதால் இது ‘மகுட ஆட்டம்’ எனவும் வழங்கப்படுகிறது.
இந்த கணியான் கூத்து ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. தெய்வத்தின் எதிர்புறத்தில் மட்டுமே இது நடத்தப்படும். இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும். கணியான் ஆட்டக்குழுவில் 7 பேர் இருப்பார்கள். பாட்டுப்பாடி விளக்கமளிப்பவர் பெயர் அண்ணாவி. இவரே குழுவுக்கும் தலைவராக இருப்பார். மகுடம் என்ற இசைக்கருவி வாசிப்பவர்கள் இருவர். ஒருவர், அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர இருவர் ஆட்டக்காரர்கள். அம்மன் ஆட்டம் ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர், திரளை போடுபவர் என துணையாட்டக்குழுவும் உண்டு. இது தேவைக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு வேறுபடும். முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் கலையாகும்.
கணியான்கள் தங்களை தெய்வீக கலை பொருந்திய மனிதர்களாக கருதிக் கொள்வார்கள்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு அளவில் உள்ளனர்.இவரகள் முற்றிலும் கூத்தை நம்பி மட்டுமே வாழ்கிறார்கள்.
வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுவது இந்த இசைக்கருவி. உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவர். மிகுந்த ஓசையை தர உச்சம். இளகிய ஓசை தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைப்பார்கள்.
பனை ஒலையைக் கொழுத்தி, அது “சடக் சடக்” என வெடிப்புடன் எரியும் போது, அதில் உச்சத்தையும் மந்தத்தையும் சூடாக்கி சுதி சேர்ப்பார்கள். “கணங் கணங்” “பிளாங் பிளாங்” என்று சத்தம் கேட்டதுமே உள்ளத்தில் ஒரு துள்ளல் பிறக்கும்.
அடிக்கடி இந்த கருவிகளை நெருப்பில் வாட்டி உரமேற்ற செய்வார்கள்.
கணியான் கூத்தின் பாடுபொருளாக சுடலைமாடன் கதை, இசக்கியம்மன் கதை, நீலி கதை, முண்டன் கதை,முத்துப்பட்டன் கதை, பத்திரகாளியம்மன் கதை, சாஸ்தா கதை, வண்ணாரமாடன் கதை, பலவேசக்காரன் கதை, மாரியம்மன் கதை, கருப்பசாமி கதை, பேச்சியம்மன் கதை, கபாலக்காரன் கதை, பகவதியம்மன் கதை, உடையார்சாமி கதை, உய்க்காட்டான் கதை, பெருமாள் சுவாமி கதை, சிவபெருமான் கதை, பார்வதி அம்மன் கதை, கோவலன் கண்ணகி கதை, மணிமேகலை கதை முதலிய பல்வேறு கதைப்பாடல்கள் இது தவிர இராமாயணம், மகாபாரத கதைகளை வாய்மொழி வழக்கில் பாடியும் ஆடுவதுண்டு.
ஸ்ரீவைகுண்டம் முத்துராமலிங்கம் அண்ணாவியார் தனக்கு 36 கிராம தெய்வங்களின் கதைகள் மனப்பாடமாகத் தெரியும் என்கிறார்.
மாயாண்டி சுடலை அய்யா!
சத்திராதி முண்டசாமிதாயான பேச்சியோடு
கச்சை வருஞ்சி பூட்டி
கருத்த கச்சை சுண்டலிட்டு
ஒட்டு கச்சை சல்லடம்... என்னும் பாடல் அடிகளை கணியான் கூத்துப் பாடலுக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
வில்லுப்பாட்டுக்கும், கணியான் கூத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு கலைகளில் எடுத்தாளப்படும் கதைகளும் ஒன்றாகவே இருக்கிறது. வில்லுப்பாட்டில் எழுதி வைத்து பாடப்படும் கதைகள், கணியான் கூத்தில் வாய் போன போக்கில் சொல் போன போக்கில் மனதில் இருந்தே பாடப்படுகிறது. வழிவழியாக இக்கலை தொடர்கிறதே ஒழிய, முறைப்படி பயிற்றுவிக்கவோ, ஆட்டுவிக்கவோ ஏற்பாடுகள் இல்லை.
அண்ணாவியின் முன்பு இரண்டு புறங்களிலும் இரண்டு ஆட்டக்காரர்கள் நிற்பார்கள். அவர்களுக்கு பின்புறத்தில் உச்ச மகுடம், மந்த மகுடம் அடிக்கும் கலைஞர்கள் நிற்பார்கள். அவர்களை ஒட்டி பின்பாட்டுக்காரரும், ஜால்ரா இசைப்பவரும் நிற்பார்கள். இரு பக்கமும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, நடுவில் ஓடி ஆடுவார்கள் கணியான்கள். அண்ணாவி பாடல் பாடும் போது ஆடும் கணியான்கள், பாடலுக்கு விளக்கம்
சொல்லும் போது, சலங்கை கட்டிய கால்களை ஆட்டியபடி அண்ணாவியின் அருகில் நிற்பார்கள். இவர்களின் ஒப்பனை மிகவும் ரசனைக்குறியதாக இருக்கும். மீசையை வழித்து விட்டு, பெண் வேடமிட்டு பொட்டிட்டு, கால்களில் சலங்கை, வட்டுக்கொண்டை, கையில் கடிகாரம், கழுத்தில் கவரிங் நகைகள் அணிந்து
ஆடுவார்கள் கணியான்கள்.
கணியான் கூத்து கலைஞர்களாக கலைமாமணி விருது பெற்ற மூவர்கள். "மூன்றடைப்பு ராமசுப்பு"முதன் முதலாக கலைமாமணி விருது பெற்று கணியான் கூத்துக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் . அதன் பின்னர் "களக்காடு வாணுமாமலை", "பேட்டை முருகன்" ஆகியோர்களும் கலைமாமணி விருது பெற்றனர்.
கணியான் கூத்து இல்லாத சுடலைமாடன், இசக்கியம்மன் கொடை விழாக்கள் இருப்பதில்லை.
பொதுவாக ஆடி, ஆவணி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் செவ்வாய்கிழமைகளிலும், சுடலை மாட சாமி கோவிலில் வெள்ளிக்கிழமைகளிலும் கொடை விழாக்கள் நடைபெறும். இந்தக் கொடை விழாவானது ஒரு வாரத்திற்கு முன்பே கால்நாட்டுதலுடன் தொடங்கும். அன்றில் இருந்தே காணியான்கள் என்று அழைக்கப்படும் இந்தக் கூத்து நிகழ்த்தும் கலைஞர்கள் இரண்டு வேளையிலும் குளித்து, காப்புக்கட்டி, ஒரு நேரம் பச்சரிசி சாதம் மட்டும் உண்டு விரதம் இருக்க துவங்குவார்கள். பின்னர் மறுவாரம் கொடை விழா நடைபெறுவதற்கு முதல் நாள் நடைபெறும் குடியழைப்பில் துவங்கி, மறுநாள் உச்சிக்கொடை, சாமக்கொடை, சுடுகாட்டு பூஜை, கை வெட்டு அளிக்கும் நிகழ்வு, முடிந்து மஞ்சள் நீராட்டு முடியும் வரை கணியான் கூத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
இந்த விழாவின் துவக்கமாகக் கோவில் சாமிகொண்டாடியை அழைத்து அமரவைத்து அவருக்கு வெற்றிலை – பாக்கு வழங்கி மரியாதை செய்து, அவர் முன்னர் கணியான் கூத்து நிகழ்ச்சி நடத்தி, அவருக்குள் சாமியை இறங்க செய்வார்கள். பின்னர் மறுநாள் நள்ளிரவு நடைபெறும் சுடுகாட்டு திரளை பூஜையிலும், கலந்து கொண்டு கணியான் கூத்தை நிகழ்த்துவார்கள். இதோடு சாமிகொண்டாடிகள் உண்ணுவதற்கு தேவையான சாப்பாட்டையும் அன்று இந்தக் கணியான் தான் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு கிராமிய கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் கணியான் கூத்து முக்கியத்துவம் பெறுகிறது.
நன்றி Ajith Kumar
No comments:
Post a Comment