சான்றோர் சொல்லாராய்ச்சி



ராஜ ராஜ சோழன் சூத்திரனா?    சத்திரியனா?    சரித்திரம் என்ன சொல்லுகிறது?

 ஷத்ரியனான சுந்தர சோழனுக்கும்,  மலையமான் குலப் பெண் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் ராஜ ராஜன்.   மலையமான் குலம் என்பது ஒரு அடிமைப்படாத சிற்றரசு வம்சமாக இருந்திருக்கிறது.    மலையமான் திருமுடிக் காரி பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.    இந்த மலையமான் வம்சம் அடிமைப் பட்டிருந்தால் சூத்திர வர்ணமாகி இருக்கும்.    அவ்வாறு அடிமைப்படவில்லை என்பது பிற சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.    இன்றைக்கும் மலையமான்,    நத்தமான்,    சுருதிமான் பரம்பரையினர் பார்கவ குல க்ஷத்ரியர் என்று கோருகின்றனர்.   


அன்றியும்,    சுந்தர சோழன் இறந்தபோது அவனது மனைவி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறி இருக்கிறாள்.    சூத்திரப் பெண்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறியதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.    மேலும்,    சிறிய வயதிலேயே முடிசூடிக் கொள்ள சொல்லப்பட்ட போது,    க்ஷத்ரிய தர்மப் படி உரிய வயது வந்ததும் முடிசூடுவதாக ராஜ ராஜன் சொன்னது அவனது மெய்கீர்த்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.    மேலும் க்ஷத்ரிய சிகாமணி என்பது அவனது மெய்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது.    எனவே அவன் க்ஷத்ரியனே.

தமிழகத்தில் பிராமணர் தவிர்த்த மற்ற அனைவரும் சூத்திரர்களும் ஆதிதிராவிடர்களுமே என வரலாற்றாளர்கள் சொல்கின்றனர்?

தமிழகத்தில் பிராமணர் தவிர்த்த அனைவரும் சூத்திரரே என்று சொல்வது மிகப் பெரும் மோசடி.    எப்படி சங் பரிவாரங்கள் சிந்துவெளி அகழ்வாய்வில் கிடைத்த காளையின் சின்னத்தை குதிரை என்று சொல்ல முயன்றார்களோ அப்படிப்பட்ட,    அல்லது அதற்கும் அதிகமான மோசடி.    ஏன் அதற்கும் அதிகமான என்று சொன்னால்,    அப்படியே நம்பவும் வைத்து விட்டனர்.    தமிழக வரலாற்றின் சூக்ஷமமே இதில் அடங்கி இருக்கிறது.    பார்ப்பன எதிர்ப்பு முழக்கமே இதன் மீதுதான் கட்டமைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் நமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு இலக்கிய ஆதாரமும்,    சங்க இலக்கியம், தொல்காப்பியம் தொடங்கி அதற்கு அடுத்தபடியாக ஏறக்குறைய 60  விழுக்காட்டுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள்,    செப்புப் பட்டயங்கள்,    ஓலைச் சுவடிகள்,    வில்லுப்பாட்டுக்கள்,    வெள்ளைக்காரர்கள் தொகுத்த பல ஆவணங்கள் போன்றவை நான்கு வர்ணம் இருந்ததற்குச் சான்றாக உள்ளன.    ஆனால் 13 ம் நூற்றாண்டுக்குப்பின் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள்,    பார்ப்பனர்,    சூத்திரர் மட்டுமே என்கிற குழப்பத்திற்குக் காரணமாகி விட்டன.    அன்றியும் கி.பி.  200 - 400   களப்பிறர் ஆட்சி இதற்கு வித்திட்டது என்று சொல்வது மிகை அல்ல.
க்ஷத்ரியர் என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்கிற வினா எழக்கூடும்.   'சான்றோன்' என்பதுதான் க்ஷத்ரிய என்பது.   'வேளாண்மை'   என்கிற சொல் எப்படி விவசாயம் என்பதற்கான சொல்லாகத் திரிக்கப்பட்டதோ,   அப்படியே சான்றோன் என்கிற சொல்,   படித்தவர்,   பண்பாளர் என்கிற பொருள் கொண்டதாகத் திரிக்கப்பட்டு விட்டது.


சரி,    அப்படியானல் இதை எப்படி உறுதி செய்வது?   

சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் என்பதை மயிலை சேனி வேங்கடசாமி அவர்கள் நிரூபித்திருக்கிறார்.    அத்துடன் சொல்லாராய்சி அறிஞர் தேவனேயப் பாவாணர் சான்றோன் என்பது ஐரோப்பாவில் இருந்த நைட்ஹூட் என்பதற்குச் சமம் என்கிறார்.

தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கும்,    அவரவர் சமூகம் சார்ந்த ஆவணங்கள் உள்ளன.    உதாரணமாக,    வன்னியர்களுக்கு வன்னிய புராணம்,    நெய்வேலி செப்பேடு    அதுபோல 64 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு திருவண்ணாமலை செப்பேடு    வேளாளர்களுக்கு மரபாள புராணம், அரித்துவாரமங்கலம்,    தளவாய்புரம் செப்பேடுகள்,  என பட்டியல் நீளும்.    அதுபோலவே சான்றோர்களுக்கு திருமுருகன்பூண்டி,    அவல்பூந்துறை செப்பேடுகள்,    வலங்கைமாலை வில்லுப்பாட்டு,    வெங்கலராஜன் கதை போன்றவை.   இத்தகைய ஆவணங்களின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில்,    அந்த அந்த சமூகத்திற்கு உரியது என்னவோ அவற்றை மட்டுமே அது குறித்துக் காட்டுவதுதான்.   




அப்படி தமிழ்நாட்டில் எந்த சமூகத்தின் ஆவணங்கள் சூரிய சந்திரகுல க்ஷத்திரியர்களைக் குறிப்பிடுகிறது?

மேலே நான் குறிப்பிட்ட சமூக ஆவணங்களில் சான்றோர்களுக்கு உரிய ஆவணங்களில் மட்டுமே சூரிய / சந்திர குலம் என்கிற பதிவுகள் உள்ளன.    ("வலங்கை மாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும்" ஆசிரியர் எஸ். இராமச்சந்திரன்,    உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)    இந்த க்ஷத்ரியர்கள் இன்றைக்கு இருக்கின்ற எந்த சாதிகளில் கலந்திருக்க வாய்ப்புகள் உள்ளது?

வரலாற்றில் சாணார் என்கிற ஒரு சாதியை நாம் பார்க்கிறோம்.    இன்றைக்கு அவர்கள் நாடார் எனப்படுகின்றனர்.    இந்த நாடார் என்பதை,    தமிழ்க் கல்வெட்டுக்கள் கூறும்   'நாடாள்வான்'   என்கிற பதவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.    அன்றியும்,    சாணார்களின் சமூக ஆவணங்கள்,    வலங்கை மாலை,    வெங்கலராஜன் கதை போன்றவற்றில் தங்களை வலங்கை உய்யகொண்ட க்ஷத்ரியர் என்று குறிப்பிட்டுக் கொள்ளுகின்றனர்.    இந்த சாணார்கள்,    அதில் பெரும் பிரிவினர் பார்த்தாலே தீட்டு என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்ட 16 - 17   நூற்றாண்டுகளில் ஒரு சிறிய பிரிவினர் 'நிலைமைக்காரர்'    அப்படியான நிலைக்குத் தள்ளப்படவில்லை.    இது ஒருபுறமிருக்க,   13ம் நூற்றாண்டு தொடங்கி,    சூத்திரர்கள் அரசியல் ஆதிக்கத்திற்கு வந்துவிட்ட நிலையில்,    திருவாங்கூர் சமஸ்தானத்தில்தான் சாணார்களை இப்படிப்பட்ட காணாமை,    அதாவது பார்த்தாலே தீட்டு என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.    அதே காலகட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் இந்த அளவுக்கு மோசமான நிலவரங்கள் இருந்ததில்லை.

தமது ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக,    சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பொருட்டு,    வெள்ளைக்கார அதிகாரிகள்    'மாவட்ட மேனுவல்'    என மாவட்ட வாரியாக வரலாற்றை  19 - 20 ம்  நூற்றாண்டில் தொகுத்தனர்.    அவ்வாறு,    திருவாங்கூர் ஸ்டேட் மேனுவல்,    திவான் ஆர். நாகமையா என்பவரால் தொகுக்கப்பட்டது.    அதில் சாணார்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மிகத் தெளிவாக,    'வலங்கை உய்யக்கொண்ட இரவி குல (சூரிய குல)  க்ஷத்திரியர்கள்'    என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.   



க்ஷத்திரிய நிலையில் இருந்தவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது யார்?

பொதுவாக,    சாதிகளுக்கும்,    தீண்டாமைக்கும் இந்து மதமும் பார்ப்பனர்களுமே காரணகர்த்தர்களாகச் சொல்லப்படுகிறது.    இது எவ்வளவு சரி என்பதைக் காண்போம்.    தமிழ் நாட்டில்,    பார்ப்பனர்கள், அதிலும் தில்லைவாழ் அந்தணர்கள் குறித்து கூற்றுவ நாயனார் புராணத்தில்,    "சோழர்க்கன்றி சூட்டோம் முடி"    என்று அவர்கள் களப்பிறர்களுக்கு முடிசூட்ட மறுத்து கேரளாவுக்குப் போய்விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.    இது க்ஷத்ரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இருந்த உறவின் நெருக்கத்தைக் காட்டுவதாக நாம் கொள்ளலாம்.   


அவ்வாறாயின்,    பார்ப்பனர்கள் க்ஷத்ரியர்களை தீண்டாமை நிலைக்குத் தள்ளி இருக்கமுடியுமா?    முடியாது,    அவசியம் நேரவில்லை என்றால்,    அப்படியான நிலைக்குத் தள்ளியவர்கள் யார்?

பார்ப்பன - க்ஷத்ரிய ஆட்சி நிர்வாகத்தின் தன்மை எத்தகையது?

சமூகத்தின் தேவைகள் பெருகப் பெருக மேலும் பல மக்கள் கூட்டங்களை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது இன்றியமையாதது.    மனித உழைப்பே பிரதான உற்பத்திச் சக்தியாக விளங்கிய அக்காலத்தில் தொல் அருவாளரை வைத்து,    காடு கெடுத்து நாடாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதிய பரப்புகள் விவசாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.    இவ்வாறு புதிய மக்களை இணைத்துக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கியது சங்க இலக்கியம் காட்டும் விவரங்களில் ஒன்று.

உதாரணமாக,    சமூகத்திற்கு வெளியே பாலை நிலப் புறக் குடிகளாக இருந்த கள்ளர்,    மறவர்,    எயினர் போன்றோர் சமூகத்தின் அங்கமாக்கப்பட்ட விதம் குறித்து முன்னரே ஒரிடத்தில் சொல்லி இருக்கிறேன்.    இவர்கள் முதலில் தூசிப் படைகளாக,    ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.    கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது.    பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர்.    இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர்.    பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக,    அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.   

இவர்களே அகம்படியர் ஆவர்.    படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது.    இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே'    என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது.    வளர்ந்துவரும் சமூகத் தேவைகள் கருதி,   சமூகத்திற்கு வெளியே இருந்தவர்களைப் படிப்படியாக சமூகத்தின் அங்கமாக,   அதன் உள்ளே கொண்டுவந்தவர்கள்,    அத்தகைய தேவை பெருகிக் கொண்டே வந்த காலத்தில் சில குடிகளை தீண்டத்தகாதவர்களாக,   அவர்ணர்களாக,    பஞ்சமர்களாக ஆக்கி வெளியே தள்ளினர் என்று கூறுவது வேடிக்கைதான். 

இன்றைக்கு பஞ்சமர்கள் என்பதாக,    அதாவது 4 வர்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக,    ஒரு பிரிவினர் சொல்லப்படுகின்றனர்.    4 வர்ணக் கோட்பாட்டை வலியுறுத்துகிற,    நடப்பிலுள்ள மனு தர்மம் பஞ்சமர் என்கிற பிரிவு எதையும் குறிப்பிடவில்லை.    தொல்காப்பியமும் இதை உறுதி செய்கிறது.    இந்நிலையில் பார்ப்பன - க்ஷத்ரிய ஆட்சி நிர்வாகம் ஒரு பிரிவு மக்களை தீண்டத்தகாதோராக சமூகத்திற்கு வெளியே தள்ளியது என்று கூறுவது தர்க்க அறிவுக்கு முரணானது.

தேவ - அசுரப் போர்கள் பற்றிப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.    இதை இரு பிரிவு மக்களுக்கு இடையிலான போர் என நாம் கருதலாம்.    அசுரர்கள்,    அசிரியா தொடர்பானவர்களாக,    வெள்ளை இன மக்களாக இருகலாம்   தேவர் என்போர் கருப்பு மற்றும் கருப்புத் தலை முடி கொண்டவர்களாக இருக்கலாம்    கி.மு. 1200  வாக்கில் மேற்காசியாவில் அசிரிய எழுச்சி ஏற்பட்டபோது நிகழ்ந்த போர்களைப் புராணங்கள் குரிப்பிடுகின்றன என்பது ஆய்வாளர்கள் சொல்லும் செய்தி.    இவ்விரு தரப்பு மக்களுக்கு இடையில் இருந்த ஆட்சி நிர்வாகம் தொடர்பான விஷயங்களே நமக்கு முக்கியத்துவமுடையது.

அசுரர்கள் மறப் போர் முறையைக் கையாள்பவர்கள்.    போரில் தோற்றவர்களை மொத்தமாக அழித்து விடுவது அல்லது நாட்டை விட்டு விரட்டி விடுவது அல்லது அவர்களை அடிமைகள் ஆக்கிவிடுவது இவர்களின் மரபு. 

தேவர்களோ அறப்போர் முறைக்குப் பழகியவர்கள்.    சில விதிகளுக்கு உட்பட்டு,    (உதாரணமாக, போரில் இருந்து விலக்கப் படவேண்டியவர்கள் குறித்து தொல்காப்பியம் தெளிவாக எடுத்துரைக்கும்)    போரில் ஈடுபடுவர்கள்.    போரில் தோற்றவர்களை அடிமைகள் ஆக்காமல்,    அவர்களிடமே ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து திறை வசூலிப்பவர்கள்.    அடிமைகளாக்கும் வழக்கம் இவர்களிடம் கிடையாது.  இவர்கள் பண்டைய சுமேரியாவில் நகர அரசுகளை நிர்மாணித்திருந்தவர்கள்.   இவர்களே தேவர்கள் என்பதாக வரலாற்றாளர்கள் சொல்கின்றனர்.


ஆட்சி நிர்வாகம் தொடர்பாக இத்தகைய வேறுபாடுகள் கொண்ட நிலவரத்தைத் தமிழக வரலாற்றில் பொருத்திக் காண்பது, தமிழ் வரலாறு பற்றிய மேலுமான புரிதலுக்கு இட்டுச்செல்லும்.

சங்க காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதி வேந்தர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது.    அந்நிலையில் அவர்களை வீழ்த்தி,    களப்பிரர் ஆட்சிக்கு வந்தனர்.    இந்தக் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அறநெறிகளை வலியுறுத்தும் நீதி நூல்கள் ஏராளமாகத் தோன்றின.    அவையே திருக்குறள்,    நாலடியார்,    இனியவை நாற்பது,    இன்னா நாற்பது,    களவழி நாற்பது,    கார் நாற்பது என்பதாகத் தொடரும் 18   கீழ் கணக்கு நூல்களாகும்.   


ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏராளமாக நீதி நூல்கள் தோன்றுவதற்கான அவசியம் என்ன?   

அந்த நீதி நூல்களிலேயே அதற்கான விடை உண்டு.   அந்த ஆட்சியின் (களப்பிரரின்) தன்மை பற்றி அவையே தெற்றெனக் காட்டும்.

நீதி நூல்களில் ஒன்றான நாலடியாரில் வரும் செய்யுள்:
"உடைப்பெருஞ் செல்வரும் சான்றோருங் கெட்டு
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகி - கடைத்தலைக்
கண்ணது ஆகி குடைக்கால் போல் கீழ்
மேலாய் நிற்கும் உலகு."

சான்றோர்கள் தம் நிலைமையிலிருந்து கீழே தள்ளப்பட்டு விட்டதைக் காட்டுகிற அதே நேரத்தில்,    புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகி விட்டனர் என்பதைக் காட்டுகிறது.    இந்த நிலவரத்தைத் தலைகீழ் மாற்றம் என்கிறது.

அடுத்து மற்றோர் நீதி நூலான பழமொழி நானூறு சொல்வதாவது:


"உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கு அருவி வெற்ப - அதுவே
சுரை ஆழ அம்மி மிதப்ப."

அதாவது வாய்மையும்,    சொல்வன்மையும்,    நீதி தவறாமையும் கொண்ட சான்றோர்கள் ஒடுக்கப்பட்டு விட்டனர்.    நிரை அற்றவர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.    இது நீரில் மிதக்கும் இயல்பு கொண்ட சுரைக் குடுவை நீரில் அமிழ்ந்து இருப்பது போலவும்,    நீரில் அமிழக்கூடிய இயல்பு கொண்ட அம்மிக்கல் மிதப்பதற்கு ஒப்பானது என்கிறது.    அதாவது ஆட்சியில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதைப் பதிவு செய்துள்ளது.   தகுதியற்றோர் ஆட்சிக்கு வந்து விட்டதை குறித்துக் காட்டுகிறது.

அதாவது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களின் இயல்பையும்,    அவர்கள் சார்ந்த மக்கள் கூட்டத்தின் இயல்பையும் வெளிப்படுத்துகிறது எனலாம்.    தமிழகத்தில் வேளாளர் சார்ந்த சமூக ஆவணங்கள் அவர்களை களப்பிரருடன் தொடர்புபடுத்துகின்றன.    உதாரணமாக,    பாண்டிய மன்னனின் மெய்கீர்த்திகளில் ஒன்று    'மேகத்தை சிறை வைத்தவன்'    இந்த மேகத்தைச் சிறை மீட்டவன் இந்திரன் என்பதுடன் அதற்குப் பிணையாக கார்காத்த வேளாளர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.    கார்காத்த வேளாளர் என்கிற பெயரே அவர்களுக்கும் மழை பொழிவிக்கிற மேகத்துக்குமான தொடர்பைக் காட்டும்.    வேளாளர் சமூக ஆவணங்களில் 'மேகந் தளை விடுத்து'   என்று சொல்லப்பட்டுள்ளது.    மேலும்,    மூவேந்தர்களை சிறைப் பிடித்து தமிழ்ப்பாட வைத்ததாகவும் வேளாளர் சமூக ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது.    இவையே களப்பிரருக்கும் வேளாளருக்குமான தொடர்பைக் காட்டுகிறது.

தவிரவும்,    புடைப்பெண்டிர் என்போர் வெள்ளாட்டிகள் என நிகண்டுகள் உரைக்கின்றன.    இந்த வெள்ளாட்டிகள் சூத்திரப் பெண்களாவர்.    இவர்களின் வாரிசுகளையே புடைப்பெண்டிர் மக்கள் என்கிறது நாலடியார்.    இவ்வாறாக சூத்திரர்கள் ஆட்சி அமைத்தது உறுதியாகிறது.    இந்நிலையில் இவர்களுக்குப் பார்ப்பனர்கள் முடி சூட்ட மறுத்துவிட்டதை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

பார்ப்பன - க்ஷத்ரிய கூட்டணியின் ஆட்சி நிர்வாகத்திலிருந்து இது பெரிதும் மாறுபட்டது.    பார்ப்பன - க்ஷத்ரியக் கூட்டணியின் ஆட்சியை பண்டைய சுமேரியாவில் இருந்த தேவர்கள் என புராணங்கள் குறிப்பிடுவோரின் ஆட்சியுடன் ஒப்பிடலாம்.    சூத்திரரின் ஆட்சியை அசுரரின் ஆட்சியுடன் ஒப்பிடலாம்.

வேந்தர்கள் ஆட்சியில் பாண்டிய மன்னன் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களை களப்பிர அரசன் அவர்களிடமிருந்து மீண்டும் பறித்துக் கொண்டுவிடுகிறான்.    இதற்கு சான்றாக செப்பேட்டு வாசகங்கள் உள்ளன.    இவ்வாறு பிடுங்கப்பட்டதற்கான காரணம் வெளிப்படையானது.    அதாவது களப்பிரருக்கு பார்ப்பனர்கள் முடி சூட மறுத்தது.    மேலும் பார்ப்பன - க்ஷத்ரிய ஆட்சியில் வெள்ளாட்டிகளை காமக்கிழத்தியராக வைத்திருந்ததும் அவர்களிடம் ஒரு கடும் பகையைத் தோற்றுவித்திருந்திருக்கும் என்பதும் வெளிப்படை.

வேந்தர்களின் ஆதரவு இன்றி பார்ப்பனர்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட பறையர் சமூகத்தினரும் பெரும்பாலும் பெளத்த மதத்தைத் தழுவி இருந்திருப்பதற்கான வாய்ப்பே அதிகம்.    எனவே சைவத்தைப் பின்பற்றிய களப்பிரர்களை (சூத்திரர்களை)  அவர்களும் ஆதரித்திருக்கும் வாய்ப்பு குறைவே.

களப்பிரர் காலகட்டத்தில் இருந்துதான் வேளாளர்கள் நில உடைமையாளர்களாக,  நில உடைமையாளர்களாக,    காராளர்களா வலுப்பெறுகின்றனர்.    களப்பிர ஆட்சியில் தங்களுக்குக் கிடைத்த இந்த நிலையை தொடர்ந்து வந்த வேந்தர்களின் ஆட்சியிலும் தக்கவைத்துக் கொண்டிருப்பர் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.    இவ்வாறாக,    நில உடைமையாளர்களாகிவிட்ட வேளாளர்களுக்கு உழுகுடிகளுக்கான தேவை பெருமளவில் எழுகிறது.

தொல்காப்பியம் கூறும் சங்க கால மரபான உழுதுண்பதே வேளாளர்களின் வருவாய்க்கான தொழில் என்கிற நிலையிலிருந்து பெரும் ஏற்றத்தை அவர்கள் பெற்றுவிடுகின்றனர்.    களப்பிரர் காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மீண்டும் வேந்தர்கள் தலையெடுக்கின்றனர்.    அதே காலகட்டத்தில்தான் சைவ வைணவ பக்தி இயக்க எழுச்சியும் தொடங்குகிறது. பெளத்த - சமண சமயங்களின் வீழ்ச்சியும் தொடங்குகிறது.    இதன் விளைவாக,    பெளத்தத்தைப் பெரிதும் தழுவியிருந்த, சங்க கால பார்ப்பனர்களான பறையர்கள் வேந்தர்களின் ஆதரவு இழந்து வீழ்ச்சியைச் சந்திக்கின்றனர்.    பறையர்கள் நிலத்துடன் பிணைக்கப்படுவதும் பக்தி இயக்கக் காலகட்டத்திலேயே தொடங்குகிறது.    இதன் பிரதிபலிப்பாகவே 8 - 9 ம் நூற்றண்டு சோழர் கல்வெட்டுகளில் 'உழப் பறையர்' என்கிற குறிப்பு காணப்படுகிறது.    குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் இப்படியான குறிப்புகள் அதிகமும் காணப்படுகிறது.

களப்பிரர் காலத்திலும் அதைத் தொடந்து வந்த சில நூற்றாண்டுகளிலும் பறையர்களின் வாழ்விடங்கள் பறைச்சேரி எனப்பட்டதுடன்,    அக்காலத்தில் அவை ஆட்சியாளர்களின் இருப்பிடமான கொட்டாகாரத்தின் அருகிலேயே அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இது விஷயத்தைத் தொடர்வதற்கு முன்,    சான்றோர்களின் ஆட்சி நிர்வாகத்திற்கும் களப்பிரரின் நிர்வாகத்திற்குமான மற்றோர் முக்கிய வேறுபாட்டைக் குறிப்பிட்டுச் செல்வோம்.    களப்பிரர் ஆட்சிக்கு வந்ததும்,    வேந்தர்களால் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டோம்.    ஆனால் களப்பிரரை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏறிய வேந்தர்கள்,    அவ்வாறு பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டு வேளாளர்களின் நிலங்களைப் பறித்திடவில்லை என்பது சான்றோர்களின் பண்பட்ட தன்மையைக் காட்டுகிறது.

மீண்டும் பறையர்களின் விஷயத்துக்கு வருவோம்.    பறையர்களின் வீழ்ச்சியும் வேளாளர்களின் எழுச்சியும் நேர் விகிதத்தில் அமைந்திருப்பதைத் தமிழக வரலாற்றை நுணுகி ஆராய்கிற எவரும் அறியமுடியும்.    வேளாள ஆதிக்கத்தின் உச்சகட்டமாகிய,    நாயக்க மன்னர்களின் காலத்தில் 13 - 14 நூற்றாண்டுகளில்தான் 'பறையர்கள் வசிக்கும் புறஞ்சேரி'    என்கிற கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.    7 - 8 நூற்றாண்டுகளில் ஆட்சியாளர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்த பறையர்களின் வசிப்பிடம் இவ்வாறு ஊருக்கு வெளியே தள்ளப்பட்டதையும்,    அக்காலத்தில் அவர்கள் நிலத்துடன் பிணைக்கப் பட்டிருந்ததையும்,    அவர்கள் தவிர கண்மாளர்,    குயவர் போன்ற பிற சாதியினரும் நிலத்துடன் பிணைக்கப்பட்டு,    ஊர் கண்மாளர் என்பதாகக் குறிப்பிடப்படுவதையும்,    சித்திரமேழிப் பெரிய நாட்டார் போன்ற வேளாளர் அவைகள் முக்கியத்துவம் பெற்றதையும் சேர்த்துக் காணும் போது நிலப்பிரபுக்களாக அக்காலத்தில் நிலைப் பெற்றுவிட்ட வேளாளர்கள் தங்களின் நிலங்களில் வேலை செய்வதற்கு உழுகுடிகள் தேவைப்பட்ட நிலையில்,    வேந்தர்களின் ஆதரவை இழந்து நின்ற,    பழைய பார்ப்பனர்களான பறையர்களை தீண்டத்தகாதோராக ஆக்கி ஊருக்கு வெளியே தள்ளினர் என்று முடிவுக்கு வரமுடியும்.    இது பார்ப்பனர்களுக்கும் வசதியாக இருந்ததனால் அவர்களும் இதைப் பின்பற்றியிருப்பர் என்பது வெளிப்படை.

ஆனால் முந்தைய பார்ப்பன - க்ஷத்ரியக் கூட்டணியின் தன்மையிலிருந்து இது பெரிதும் வேறுபட்டது.    பார்ப்பனர்கள் வெகு சொற்பமாக இருந்த இலங்கையிலும் இவ்வாறான நிலைமை தோன்றியதைக் கொண்டு நாம் வேளாளர்களின் பிரதான பங்கை உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் வேளாளர்களின் தன்மை என்பது அவர்களின் பெண் வழி சமுதாய அமைப்பிலிருந்தும், கிரேக்கத்தில் அடிமை உடைமையை ஏற்படுத்தியது போன்று,    இங்கு அடிமை முறை இல்லாத நிலையில் தீண்டாமை என்கிற நிலையை எற்படுத்தியதிலிருந்தும் தெரிகிறது என்றால் அது மிகை அல்ல.


தங்கள் கூற்றுப்படி உழவுத்தொழிலை மேற்கொண்டோர் யார்?

வேளாளர் என்போர் உழுதுண்டு வாழ்வோர்.   அதே நேரத்தில் அவர்களின் முக்கிய கடமை   'மேல் மூவர்க்கும் குற்றேவல் செய்வது'.

களப்பிரர்கள் காலத்தில் நடந்த மாற்றங்களைப் பின் வந்த வேந்தர்கள் சரி செய்யாமல் விட்டு விட்டனரா.   ஏன்?

அதுதான் அவர்களின் பண்பட்ட தன்மைக்குச் சான்று என்பதையே எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.

"சாதுர் வர்ணம் மமா ஸ்ருஷ்டம்"   என்று கூறும் கண்ணன் பயிர்த் தொழிலும்,    பசுக்களைப் பேணுதலும் வைசிய வர்ணம் எங்கிறான்.   இதன்படி தமிழகத்தின் பெரும்பான்மையோர் தாங்கள் கூறுவது போல் எப்படி சூத்திரர்களாக இருக்கமுடியும்?    வைசியர்களாகத்தானே இருக்க முடியும்?

கண்ணன் மட்டுமல்ல    'நாமலிங்கானுசாசனம்'    என்று சொல்லப்படும் அமரகோசமும் கூட பயிர்த்தொழில் வைசிய வர்ணத்தில் தொழில் என்றுதான் குறிப்பிடுகிறது.    குப்தர் கால அரசியல் மாற்றங்களின் விளைவு இது.    வடநாட்டில் ராஜ புத்திரர்கள் க்ஷத்ரியராக ஏற்கப்பட்டனர்.    ஆனால் தமிழகத்தில் அதிக பட்சமாக சற்சூத்திரர் என்றே சொல்லிக்கொள்ள முடிந்தது.    இதுவே தமிழகத்தில் வர்ண இலக்கணம், வடநாட்டை விட கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டதைக் காட்டுகிறது.


தமிழகத்தின் பெரும்பான்மையோர் சூத்திரர் என்று நீங்கள் எப்படிக் குறிப்பிடுகிறீர்கள்?    வன்னியர்களும் பறையகளும் சூத்திரர்களா?    இல்லை.    முன்னவர் க்ஷத்ரியர் (அக்னி குலம்),    பின்னவர் ப்ராமணர்.    இவ்விரு சாதிகளும்தான் 15% க்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட சாதிகள்.

ராஜ ராஜனும் அவரது முன்னோர்களும் தேவரென்று பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டனர்.    உதாரணமாக யானை மேல் துஞ்சிய தேவர்,    ராஜராஜ சோழ தேவர் என்று,    இதற்கு உங்கள் பதில்?

(சோழர் கால)   மதுராந்தகம் கல்வெட்டு வாசகம் இதோ:

"இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்"
இந்த தேவரும் நீங்கள் நினைக்கும் தேவரா?


முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கண்டறிமின்
... அறி மடமும்
சான்றோர்க்கு அணி.
-நாலடியார்.

இதில் பாரி,   பேகன் என்கிற ஆட்சியாளர்களே சான்றோர் என்று குறிப்பிடப் படுகின்றனர்.

மேலும்,    நீங்கள் குறிப்பிட்டுள்ள குறள்களில்   சான்றவர் சான்றாண்மை குன்றின்   என்பதில் சான்றவர் என்று முதலில் வருவதன் பொருள் என்ன?    நீங்கள் சொல்லியுள்ள குறள்களுக்கு   உரையாசிரியர் காலிங்கர் என்ன பொருள் சொல்லி இருக்கிறார்?    நீங்களே தேடி எடுத்துச் சொல்லுங்கள்!


இதொ இன்னும் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள்:

சேக்கிழார் குன்றத்தூர் தொண்டை மண்டல சைவ வேளாளர் என்பது உமக்குத் தெரிந்திருக்கும்.    அவர் பற்றி திருமழபாடி கல்வெட்டு  (12 ம் நூற்றாண்டு)    "குன்றத்தூர் சேகிழான் மாதவடிகள் இராம தேவனான உத்தமச் சோழப் பல்லவரையன்"   இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

செங்குன்றாபுரம்,   விருதுநகர் கல்வெட்டு (13 ம் நூற்றாண்டு)


"கம்பன் தேவனான நாற்பத்தெண்ணாயிர ஆச்சாரி"
இது கம்மாளருக்கு இருந்த தேவர் பட்டம்.
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

திருச்சி மாவட்டம்,    12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:

"வண்ணான் அழிவில்லாத தேவன்"
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?


எதையும் ஆய்ந்து அலசி முடிவெடுப்பதே சான்றோர் வழி.    அதனால் தான் அறிவிற் சிறந்த சான்றோர் அவைக்குப்போனால் பாம்பும் சாகாது என்றனர்?

தன் கன்றை இழந்த பசு நீதிகேட்டு வந்ததற்கு நீதி வழங்கியதையும்,    பருந்துக்கு புறாவின் எடைக்குச் சமமாக தனது சதையைக் கொடுத்து நீதி வழங்கியதையும் குறிப்பிடும்போது,    பாம்பும் கூட நீதி கேட்டு வந்திருக்கலாம் என்று நினைத்து அதைச் சாக விடமாட்டார் என்பதுதான் பொருள்.    மன்னர் ஆட்சி காலத்தில் தனி நீதிமன்றமெல்லாம் கிடையாது.    மன்னரே நீதிபதி.    அந்த அவையைத்தான் சான்றோர் அவை என்பது குறிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.    அத்துடன் நாலடியாரிலும் சான்றோர்க்கு பாரியும் பேகனும் சொல்லப்பட்டுள்ளனர்.


சான்றார் என்றால் கள்ளிறக்குவோர் என்பதாக,    போர் வீரர் இல்லை என்பதாக சொல்வோருக்கு:

"சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே"  புறம் 312:  வரி 2


பழைய உரை:
"தன்குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி, அதற்குரிய அறிவு, அதற்குரிய செய்கைகள் ஆகிய இவற்றால் நிறைந்தவனாகச் செய்தல் தகப்பனுகுக் கடமையாம்"
காண்க:   புறநானூறு மூலமும் பழைய உரையும் பதிப்பாசிரியர்:   உ.  வே.  சாமிநாதையர் முதல் பதிப்பு : 1894;   உ. வே. சா 1971 ஆம் ஆண்டு பதிப்பு பக்கம் 486   (உ. வே. சா குறிப்பு:   நச்சினார்க்கினியர்,   பேராசிரியர் காலத்தை ஒத்த உரை.   அவர்களின் உரையை ஒட்டியும் மறுத்தும் சொல்லப்பட்டது.) 12 - 13 ஆம் நூற்றாண்டு.

மேற்படி பதிப்பு,   பக்கம் 475,   புறம் பாடல் 301.


குறிப்புரை:   முதல் வரி:   சான்றோர் -   போர்வீரர்.
"தேர்தர வந்த சான்றோரெல்லாம்" புறம் 63  என்பதும்,   சான்றோர் மெய்ம்மறை பதிற்றுப்பத்து 14:12 என்னுமிடத்து   "ஈண்டுச் சான்றோர் என்பது போரில் அமைதியுடைய வீரரை"   என்றும் அதன் உரையும் அறியற்பாலன"

பதிற்றுப்பத்து பாடல் 14 வரி 12


"நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை"
பழைய உரை:   "நோன்புரித் தடக்கையென்றது" வலி பொருந்துதலையுடைய தடக்கையென்றவாறு.
ஈண்டுச் சான்றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை.   மெய்ம்மறை - மெய்புகு கருவி


மெய்ம்மறையென்றது அச்சான்றோர்க்கு மெய்புகு கருவிபோலப் போரிற் புக்கால் வலியாய் முன்னிற்றலின்.
இச்சிறப்பு நோக்கி இதற்கு 'சான்றோர் மெய்ம்மறை'   என்று பெயராயிற்று.

சான்றோரின் தொழில் கள்ளிறக்குதல் என்போருக்கு:


வேளாள குலத்தில் உதித்த பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் சொல்வதாவது:
பெரியபுராணம்:   எனாதி நாதர் புராணம்

பாடல் 2   "ஈழகுலச் சான்றார் ஏனாதி நாதர்"
பாடல் 3   "மன்னவர்க்கு வென்றி வடிவாட் படைபயிற்றும் தன்மைத் தொழில் விஞ்ஞை"
பாடல் 5   "தள்ளாத தங்கள் தொழிலுரிமைத் தாயம்"
பாடல் 7   "ஆனாத செய்தொழிலாம் ஆசிரியத் தன்மை"
பாடல் 31  "தோட்டன் பூந்தாறார்"  (ஆத்திமாலை புனைவது சோழர்க்கு மட்டுமே உரியது)

ஈழ குலச் சான்றாருக்கு வாட்பயிற்சி அளிப்பதே தொழிலே யன்றி கள்ளிறக்குதல் அல்ல.   அன்றியும் அது தள்ளிவிடமுடியாத உரிமை என்பதையே தள்ளாத தாயம் என்று சொல்லி இருக்கிறார். ஆசிரியத்தன்மை எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இன்றுவரையிலும் கன்யாகுமரி மாவட்டத்தில் ஆசான் என்போர் இருக்கின்றனர்.   ஆர்வமும்,   முயற்சியும் உள்ளவர்கள் அவர்களின் கலை என்ன?   அவர்களின் குலம் என்ன?  என்பதை விசாரித்து அறிவார்களாக!                                                  நன்றி-பிரவாகன் பதில்கள்

No comments:

Post a Comment

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...