_தோண்டி பட்டை_
பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனைமரங்கள் சங்ககாலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது.
பனை மர ஓலையில் பட்டைகளைச் செய்ய கற்றுக்கொண்ட நம் மூதாதையர்கள் , குடிநீரைச் சுமந்து செல்வதற்கு ஒரு வடிவமைப்பை உருவாக்க முயற்சித்தார்கள். பனை ஓலைப் பட்டைகளைப் பயன்படுத்தும்போது இரு கைகளையும் பிடித்து இணைத்தே பயன்படுத்தவேண்டும். ஆனால் தோண்டி என்பது ஒரு கையில் சுமக்கும் இலகுவான ஒரு பொருள் ஆகும்.குழந்தைகளை இடுப்பில் சுமக்கும் ஒரு தாய், தன் குழந்தையுடன் இடம்பெயர்கையில் தண்ணீர்த் தேவைக்கென எடுத்துச் செல்ல கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் இந்த தோண்டி பட்டை என்றனர்.
பனை ஓலைப் பட்டை ஒரு முற்றுப்பெறாத வடிவம். அதை உருட்டி வடிவம் ஏற்படுத்தி, குறுக்காக ஒரு கம்பை கொடுத்து சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது தான் தோண்டி பட்டை. இப்படி ஒரு நேர்த்தியான வடிவமைப்பாளர்கள் தமிழ் மண்ணில் இருந்திருக்கிறார்கள்என்பதை நினைத்துப் பார்ப்பது பெருமை பட வைக்கிறது..
ஒரு பொருளுக்கான தேவையை அந்த நிலமும் அங்கு வாழும் மனிதர்களுமே முடிவு செய்கிறார்கள். கடற்கரையில் வாழும் மனிதர்களுக்கு நல்ல தண்ணீர் எளிதில் கிடைக்கும் பொருளாக இல்லை. அதனால் தண்ணீரை சேமித்து வைக்க மண் கலயங்களை உருவாக்கும் முன்பே வடிவமைக்கப்பட்டதுதான் தோண்டி பட்டை. இன்றைக்குத் தோண்டியின் செழுமைப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் உருவாகியிருக்கலாம். ஆனாலும் தோண்டி அதன் தொன்மை வடிவத்திலேயே பிரபலமாகி யிருக்கிறது.
தோண்டி செய்வதற்கு அகலமான ‘ஒற்றைச் சிறகு' ஓலை வேண்டும். குருத்தோலையிலிருந்து நான்கு ஓலைகள் விட்டு பசுமையான ஓலைகளையே தோண்டி செய்யத் தெரிந்தெடுப்பார்கள். குறிப்பிட்ட ஓலைகளை தெரிவுசெய்வது ஓலைகளின் முதிர்ச்சி, வலிமை, நீடித்த உழைப்பு, செய்யும் பொருளுக்கு ஏற்றபடி வளைந்துகொடுக்கும் தன்மை ஆகியவை அடிப்படைகளாக உள்ளன.
ஒரு பனை மட்டையிலிருந்து பிரியும் ஓலைகளை வலது, இடது என இரண்டாக பகுப்பார்கள். ஒரு விரிந்த பகுதி எடுத்து, அதன் ஓரத்திலிருக்கும் சிறிய ஓலைகளை நீக்கிவிட்டு குறைந்தபட்சம் ஒன்பது இலக்குகள் கொண்ட ஓலைகளை தெரிந்து கொள்ளுவார்கள். இவற்றை முதலில் நன்றாகக் காய வைத்து ‘சுருக்கு'ப் பிடித்துக்கொள்ளுவார்கள்.
சுருக்குப் பிடித்தல் ஓலைகளை பாடம் பண்ணும் முறைகளில் அடிப்படையானது. விரிந்த ஓலைகளை அப்படியே வெய்யிலில் உலர்த்திவிட்டு மறுநாள் அதிகாலையில் பனி விழுந்து ஓலை பசுமையாக இருக்கும் நேரத்தில், குருத்தோலையின் வடிவத்தில் இணைந்திருக்கும்படி அவற்றைக் கட்டிவிடுவதுதான் சுருக்குப் பிடித்தல். இப்படிச் செய்யும்போது அந்தப் பனை ஓலைகள் பதப்படுத்திவிடுகிறது.அதில் உள்ள மேடுபள்ளங்கள் யாவும் நீங்கி ஒரு நேர்த்தியான வடிவம் கிடைத்துவிடும்.
இவ்விதம் சுருக்குப் பிடிக்கப்பட்ட ஓலைகளை தண்ணீரில் ஊறப்போடுவார்கள். அவை சரியான அளவில் மென்மையாகும்படி செய்த பின்னர், கத்தியை வைத்து உட்புறமாக எழுந்து நிற்கும் ஈர்க்கை ஒரு வரிசை சிறிதாகக் கீறிவிடுவார்கள். இதுபோலவே இன்னும் எட்டு விரல்கடை விட்டு, மீண்டும் ஒரு வரி கீறி விடுவார்கள். இவ்விதம் பனை ஈர்க்கில் கீறப்பட்டதால், அவற்றை மடக்குவது எளிதாகிறது.இவ்வாறு தோண்டி பட்டை இறுதி வடிவம் அடைகிறது.
நமது ஊர்களில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்புகூட தோண்டிகள் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோண்டி வாளிகளில் சுமார் 15 நாட்கள் தண்ணீர் இறைக்க இயலும். .நீர் முகர குறைந்த செலவில் செய்யப்பட்ட கருவி தான் தோண்டி பட்டை எனலாம்.இன்றும் திருமண வீடுகளில் சாம்பார் போன்ற குழம்புகளை பெரிய சட்டிகளில் இருந்து எடுத்து மாற்றுவதற்குத் தோண்டிகளையே பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment